அரசு ஆஸ்பத்திரி டாக்டருக்கு ரூ.11 லட்சம் அபராதம்


அரசு ஆஸ்பத்திரி டாக்டருக்கு ரூ.11 லட்சம் அபராதம்
x

தவறான சிகிச்சையால் கர்ப்பிணி பெண் உயிரிழந்த வழக்கில் அரசு ஆஸ்பத்திரி டாக்டருக்கு ரூ.11 லட்சம் அபராதம் விதித்து ஹாசன் நுகர்வோர் கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.

ஹாசன்:

தவறான சிகிச்சையால் கர்ப்பிணி பெண் உயிரிழந்த வழக்கில் அரசு ஆஸ்பத்திரி டாக்டருக்கு ரூ.11 லட்சம் அபராதம் விதித்து ஹாசன் நுகர்வோர் கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.

கர்ப்பிணி பெண்

ஹாசன் மாவட்டம் சக்லேஷ்புரா தாலுகா அனேமஹால் கிராமத்தை சேர்ந்தவர் மோகன் குமார். இவரது மனைவி ஆஷா. கடந்த 2021-ம் ஆண்டு மார்ச் 26-ந் தேதி ஆஷா பிரசவத்திற்காக சக்லேஷ்புரா கிராப்போர்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு டாக்டர் புருஷோத்தம்மன் என்பவர் பணியில் இருந்தார். அவர் ஆஷாவை பரிசோதனை செய்துவிட்டு அன்றைய தினம் மாலை வரும்படி கூறினார்.

இதையடுத்து மாலையில் சென்றபோது, ஆஷாவை பரிசோதனை செய்த டாக்டர் புருஷோத்தம்மன் குழந்தை இறந்துவிட்டதாக கூறினார். முன்னதாக மனைவிக்கு அறுவை சிகிச்சை செய்யும்படி மோகன்குமார், டாக்டரிடம் கூறினார். ஆனால் டாக்டர் புருஷோத்தம்மன் கேட்கவில்ைல. மாறாக ஊசி மட்டும் போட்டுவிட்டார். இதில் அன்றைய தினம் இரவு தீராத வயிற்று வலி ஏற்பட்டு, ஆஷா கோமா நிலைக்கு சென்றார்.

சிகிச்சை பலனின்றி சாவு

இந்தநிலையில் காலையில் வந்து ஆஷாவை பார்வையிட்ட டாக்டர் உடல் நிலை மோசமாக இருப்பதாக கூறி ஹாசன் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். அங்கு ஆஷாவிற்கு அறுவை சிகிச்சை செய்து இறந்த குழந்தையை வெளியே எடுத்தனர். அப்போது ஆஷாவிற்கு அதிகளவு ரத்தபோக்கு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து டாக்டர்கள் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பினும் மார்ச் 29-ந் தேதி ஆஷா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த மோகன்குமார் ஹாசன் நுகர்வோர் கோர்ட்டில் கிராப்போா்டு அரசு ஆஸ்பத்திரி டாக்டர் புருஷோத்தம்மன் தவறான சிகிச்சை அளித்ததால் தனது மனைவி இறந்துவிட்டதாகவும், எனவே இதுபற்றி உரிய விசாரணை நடத்தி டாக்டர் மீது நடவடிக்கை எடுக்க கோரி வழக்கு தொடர்ந்தார்.

டாக்டருக்கு ரூ.11 லட்சம் அபராதம்

இந்த மனு மீதான விசாரணை ஹாசன் நுகர்வோர் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்தநிலையில் விசாரணை முடிந்தவடைந்த நிலையில் இந்த வழக்கில் நேற்று முன்தினம் தீர்ப்பு கூறப்பட்டது.

அதாவது கர்ப்பிணி பெண் உயிரிழப்புக்கு காரணமானதாக கூறி டாக்டர் புருஷோத்தம்மனுக்கு ரூ.11 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். நுகர்வோர் கோர்ட்டின் இந்த தீர்ப்பை மோகன்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் வரவேற்றுள்ளனர்.


Next Story