ராணுவ உடையில் சுகோய் போர் விமானத்தில் பறந்த ஜனாதிபதி திரவுபதி முர்மு


ராணுவ உடையில் சுகோய் போர் விமானத்தில் பறந்த ஜனாதிபதி திரவுபதி முர்மு
x

அசாமில் ஜனாதிபதி திரவுபதி முர்மு ராணுவ உடையில் சுகோய்-30 எம்.கே.ஐ. ரக போர் விமானத்தில் இன்று பறந்து சென்றார்.

புதுடெல்லி,

ஜனாதிபதி திரவுபதி முர்மு அசாமில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். முப்படைகளின் தலைவராக விளங்கும் ஜனாதிபதி சுகோய்-30 எம்.கே.ஐ. ரக போர் விமானத்தில் பறக்க இன்று தயாரானார்.

இதற்காக ராணுவ உடை அணிந்தபடி தேஜ்பூர் விமானப்படை நிலையத்திற்கு வந்த அவர், பின்னர் 2 விரல்களை உயர்த்தி வெற்றிக்கான அடையாளம் காட்டினார். அதன்பின்னர், விமானியுடன் போர் விமானத்தில் இன்று பறந்து சென்றார்.

இந்த சுகோய்-30 எம்.கே.ஐ. ரக போர் விமானம் இரண்டு பேர் அமர கூடிய வகையில் உருவாக்கப்பட்ட போர் விமானம் ஆகும். ரஷியாவை சேர்ந்த சுகோய் விமானம், இந்தியாவின் உரிமம் பெற்ற இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்டு உள்ளது.

இதற்கு முன்பு 2009-ம் ஆண்டு, அப்போது ஜனாதிபதியாக இருந்த பிரதீபா பாட்டீல் போர் விமானத்தில் பறந்துள்ளார்.


Next Story