3 நாள் பயணமாக மொரிஷியஸ் புறப்பட்டு சென்றார் ஜனாதிபதி திரவுபதி முர்மு


3 நாள் பயணமாக மொரிஷியஸ் புறப்பட்டு சென்றார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
x
தினத்தந்தி 11 March 2024 9:07 AM GMT (Updated: 11 March 2024 11:03 AM GMT)

மொரிஷியஸ் நாட்டில் நாளை தேசிய தின விழா கொண்டாடப்படுகிறது.

புதுடெல்லி,

ஜனாதிபதி திரவுபதி முர்மு 3 நாள் அரசு முறைப்பயணமாக இன்று காலை மொரிஷியஸ் புறப்பட்டு சென்றார். மொரிஷியஸ் நாட்டின் தேசிய தின விழா நாளை கொண்டாடப்படுகிறது. இதில் சிறப்பு விருந்தினராக திரவுபதி முர்மு பங்கேற்கிறார்.

இந்திய கடற்படையின் முதல் பயிற்சிப் படைப்பிரிவின் இரண்டு கப்பல்கள் – ஐஎன்எஸ்-டைர் மற்றும் சிஜிஎஸ் சாரதி ஆகியவற்றுடன் இந்திய கடற்படையின் ஒரு குழுவும் கொண்டாட்டத்தில் பங்கேற்கிறது. இந்த பயணத்தின் போது மொரிஷியஸ் அதிபர் பிரித்விராஜ்சிங் ரூபன் மற்றும் மொரிஷியஸ் பிரதமர் பிரவிந்த் குமார் ஜக்நாத் ஆகியோருடன் ஜனாதிபதி திரவுபதி முர்மு ஆலோசனை நடத்துக்கிறார்.

மொரிஷியஸ் சபாநாயகர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் பல தலைவர்களையும் திரவுபதி முர்மு சந்திக்கிறார். மேலும் ஆப்ரவாசி காட், கண்டங்களுக்கு இடையேயான அடிமை அருங்காட்சியகம் மற்றும் கங்கா தலாவ் ஆகியவற்றை ஜனாதிபதி முர்மு பார்வையிடுகிறார்.

மொரிஷியஸ் பல்கலைக்கழகத்தில் மொரிஷியஸ் இளைஞர்கள், புலம்பெயர்ந்த இந்தியர்கள் மற்றும் இந்திய சமூகத்தினர் பங்கேற்கும் கூட்டத்திலும் திரபதி முர்மு உரையாற்றுகிறார்.

2000 ம் ஆண்டு முதல், மொரிஷியஸ் நாட்டின் தேசிய தினத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளும் 6-வது இந்திய ஜனாதிபதி என்ற பெருமையை ஜனாதிபதி முர்மு பெறுகிறார். ஜனாதிபதியின் இந்த அரசுமுறை பயணம் இந்தியாவிற்கும் மொரிஷியஸுக்கும் இடையிலான நீண்டகால நட்பை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.


Next Story