தமிழகத்தில் உலகத்தரத்தில் மேம்படுத்தப்படும் 34 ரெயில் நிலையங்கள்: இன்று அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி


தமிழகத்தில் உலகத்தரத்தில் மேம்படுத்தப்படும் 34 ரெயில் நிலையங்கள்: இன்று அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி
x
தினத்தந்தி 25 Feb 2024 11:59 PM GMT (Updated: 26 Feb 2024 12:33 AM GMT)

தமிழகத்தில் 4 ரெயில்வே மேம்பாலத்தையும், 114 சுரங்க ரெயில் பாதையையும் மோடி திறந்து வைக்கிறார்.

நாட்டில் முக்கிய நகரங்களில் உள்ள ரெயில் நிலையங்களின் எதிர்கால வளர்ச்சியை கருத்தில் கொண்டு அம்ருத் பாரத் ரெயில் நிலையம் திட்டத்தின் கீழ் ரெயில் நிலையங்கள் மேம்படுத்தப்படுகின்றன.

இந்த திட்டத்தின் கீழ் ரெயில் நிலையங்களின் சுற்றுப்புற பகுதிகளை தூய்மையாக பராமரிப்பது, இலவச வைபை வசதி, காத்திருப்பு அறை, மின்தூக்கி, மின்படிக்கட்டு, உள்ளூர் தயாரிப்பை முன்னிலைப்படுத்தும் ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு கடை அமைப்பது உள்ளிட்ட வசதிகள் அமைக்கப்பட உள்ளன. நாடு முழுவதும் உள்ள 1,318 ரெயில் நிலையங்கள் இந்த திட்டத்தின் கீழ் மேம்படுத்த தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

முதல்கட்டமாக கடந்த ஆண்டில் 508 ரெயில் நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு மேம்படுத்துவதற்கான பணிகள் நடந்து வருகிறது.

இந்தநிலையில் 2-ம் கட்டமாக நாடு முழுவதும் 554 ரெயில் நிலையங்களை உலகத்தரத்தில் மேம்படுத்துவதற்கான பணிகளை பிரதமர் நரேந்திர மோடி இன்று (திங்கட்கிழமை) தொடங்கி வைக்கிறார்.

தமிழகத்தில் ரூ.4,100 கோடியில் 77 ரெயில் நிலையங்களை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ள நிலையில் முதல்கட்டமாக 18 ரெயில் நிலையங்களை மேம்படுத்தும் பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன.

2-ம் கட்டமாக சென்னை கடற்கைரை, பூங்கா, அம்பத்தூர், பரங்கிமலை, கிண்டி, மாம்பலம், மேட்டுப்பாளையம், கோவை வடக்கு, ஈரோடு, மொரப்பூர், திண்டுக்கல், தூத்துக்குடி, திருச்செந்தூர், மயிலாடுதுறை, கும்பகோணம், விருத்தாச்சலம், தர்மபுரி, ஒசூர் உள்ளிட்ட 34 ரெயில் நிலையங்களை மேம்படுத்தும் பணியை மோடி நாளை தொடங்கி வைக்கிறார். இதுதவிர தமிழகத்தில் 4 ரெயில்வே மேம்பாலத்தையும், 114 சுரங்க ரெயில் பாதையையும் மோடி திறந்து வைக்கிறார்.


Next Story