மொராக்கோ நிலநடுக்கம்: உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல்

மொராக்கோ நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 296 பேர் உயிரிழந்தனர்.
மொராக்கோ நிலநடுக்கம்: உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல்
Published on

டெல்லி,

வடக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு மொராக்கோ. இந்நாட்டில் நேற்று இரவு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டு நேரப்படி இரவு 11.11 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது.

ரிக்டர் அளவில் 7.0 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் அந்நாட்டின் அல்-ஹவுஸ், மாரகேஷ், அஷிலால், சிஷவ், டரொண்ட் ஆகிய நகரங்கள் அதிகம் பாதிக்கப்பட்டன.

நிலநடுக்கத்தால் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இரவு நேரம் என்பதால் மக்கள் வீடுகளில் உறங்கிக்கொண்டிருந்த நிலையில் கட்டிடங்கள் இடிந்து இடிபாடுகளுக்குள் பலர் சிக்கிக்கொண்டனர்.

இதனிடையே, இந்த நிலநடுக்கத்தில் இதுவரை 296 பேர் உயிரிழந்தனர். மேலும் 150க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். நிலநடுக்கத்தால் கட்டிட இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியுள்ள நிலையில் மீட்புப்பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், மொராக்கா நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், மொராக்கோவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பலர் உயிரிழந்ததை அறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன். இந்த துயரமான நேரத்தில், எனது எண்ணங்கள் மொராக்கோ மக்களுடன் உள்ளன. அன்பானவர்களை இழ்ந்தவர்களுக்கு எனது ஆறுதலை தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவேண்டும். இந்த இக்கட்டான சூழ்நிலையில் மொராக்கோ அனைத்து உதவிகளையும் செய்ய இந்தியா தயாராக உள்ளது' என தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com