

உப்பள்ளி-
தார்வார் மாவட்டம் கலபுரகி தாலுகா கமலாபுராவை சேர்ந்தவர் மவுதீன் லால்சாப் (வயது 47). இவர் மீது கோகுல் ரோடு பகுதியில் குற்ற வழக்கு ஒன்று பதிவாகியிருந்தது. இந்த குற்ற வழக்கு தொடர்பாக கோகுல்ரோடு போலீசார் அவரை கைது செய்தனர். தற்போது அவர் உப்பள்ளி சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த சில நாட்களாக அவர் சக கைதிகளுடன் சேராமல், தனியாக சிறைக்குள் சுற்றி வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் கழிவறைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றவர், திரும்பவில்லை. பணியில் இருந்த போலீசார் அவரை
தேடினர். அப்போது அவர் கழிவறை வழியாக தப்பி சென்றிருப்பது தெரியவந்தது. அதாவது சிறையில் ஜன்னல் வழியாக வெளியே குதித்து தப்பி சென்றுள்ளார். இதை அறிந்த போலீசார், சிறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சிறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் அங்கிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அந்த கேமரா காட்சிகளில் கைதி தப்பி சென்றது இடம் பெற்றிருந்ததாக கூறப்படுகிறது. அதை வைத்து தப்பியோடிய சிறை கைதியை போலீசார் தேடி வருகின்றனர். இதற்காக உப்பள்ளி போலீசார் தரப்பில் தனிப்படை அமைக்கப்பட்டிருப்பதாக சிறைத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.