நம்பிக்கையில்லா தீர்மானம் : பிரதமர் மோடி மீது குற்றச்சாட்டை அடுக்கிய டி.ஆர். பாலு


நம்பிக்கையில்லா தீர்மானம் : பிரதமர் மோடி மீது குற்றச்சாட்டை அடுக்கிய டி.ஆர். பாலு
x

பிரதமர் நாடாளுமன்றத்துக்கும் வரவில்லை, மணிப்பூருக்கும் செல்லவில்லை என தி.மு.க. எம்.பி. டி.ஆர்.பாலு குற்றம்சாட்டினார்.

புதுடெல்லி,

மக்களவையில் மத்திய அரசுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் மீது நாடாளுமன்ற திமுக குழுத்தலைவர் டி.ஆர்.பாலு பேசும்போது கூறியதாவது:-

பிரதமர் அடிக்கல் நாட்டிய மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள், 5 ஆண்டுகளாகியும் இன்னும் தொடங்கப்படவில்லை;

பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர் வேலையின்மை அதிகரித்துள்ளது;

அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது;

பெரும்பான்மை மக்களை வைத்து சிறுபான்மையின மக்களின் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. மணிப்பூரில் இரக்கமின்றி 143 சிறுபான்மையினர் கொல்லப்பட்டு உள்ளனர். 65 ஆயிரம் பேர் மாநிலத்தை விட்டு வெளியேறி உள்ளனர். மணிப்பூர் முதல்வரால் எதுவும் செய்யமுடியவில்லை.

பிரதமர் நாடாளுமன்றத்துக்கும் வரவில்லை, மணிப்பூருக்கும் செல்லவில்லை. பிரதமரை நாடாளுமன்றத்திற்கு வர பொதுமக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர், அவருக்கு என்ன தடை உள்ளது?

குஜராத் வன்முறைகளின்போது ராஜதர்மத்தை பின்பற்ற சொன்னார் வாஜ்பாய்- அதையே சொல்கிறோம். மணிப்பூரில் பெண்கள் நிர்வாண ஊர்வலம், பொதுமக்கள் படுகொலை உள்ளிட்டவை நடந்துள்ளன. மணிப்பூர் வன்முறைகளை ஐரோப்பிய நாடாளுமன்றம் உட்பட உலக நாடுகள் கண்டித்துள்ளன.

முன்பு குஜராத்தில் நடந்தது போல இப்போது மணிப்பூரில் நடக்கிறது;

தேர்தலின்போது பாஜக அறிவித்த வாக்குறுதிகளை மோடி அரசு நிறைவேற்றவில்லை .உலக நாடுகள் பாராட்டிய, சேது சமுத்திரத்திட்டம் சங் பரிவார் அமைப்பால் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு, நிதி ஒதுக்கீடு வாக்குறுதிகள் எதனையும் மத்திய அரசு நிறைவேற்றவில்லை. ரூ.15 லட்சம் வழங்கப்படும் எனும் வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை.

5 லட்சம் வேலைவாய்ப்புகளை ஒழித்துவிட்டார் பிரதமர் மோடி.

தமிழ்நாட்டில் இருந்து கிடைக்கும் வருவாயில் 20% மட்டுமே தரப்படுகிறது.

ஈழத் தமிழர் பிரச்சனை குறித்த ராஜீவ்-ஜெயவர்த்தனே ஒப்பந்தம் செயல்படுத்தப்படவில்லை.

13வது திருத்தம் நடைமுறைக்கு வரவில்லை. கச்சத்தீவு மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என கூறினார்.


Next Story