கள்ளக்காதலை கைவிட்டதால் ஆத்திரம்: பெண்ணை எரித்து கொன்றுவிட்டு கள்ளக்காதலன் தற்கொலை


கள்ளக்காதலை கைவிட்டதால் ஆத்திரம்: பெண்ணை எரித்து கொன்றுவிட்டு கள்ளக்காதலன் தற்கொலை
x

பெண்ணை நடுரோட்டில் வைத்து எரித்து கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் பட்டாம்பி அருகே திருத்தாலா பகுதியை சேர்ந்தவர் பிரவியா (வயது 31). இவர் பட்டாம்பியில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். அவர் நேற்று வேலைக்கு செல்வதற்காக ஸ்கூட்டரில் பட்டாம்பி நோக்கி சென்று கொண்டிருந்தார். கொடுமுண்டா என்ற இடத்தில் சென்ற போது, ஒருவர் பிரவியாவை தடுத்து நிறுத்தினார்.

பின்னர் அவர் கத்தியால் பிரவியாவை குத்தி ஸ்கூட்டரில் இருந்து கீழே தள்ளினார். தொடர்ந்து அந்த நபர் கண்ணிமைக்கும் நேரத்தில் கேனில் இருந்த பெட்ரோலை பிரவியா மீது ஊற்றி தீ வைத்து எரித்தார். இதில் வலி தாங்க முடியாமல் அவர் அலறி துடித்தார். பின்னர் அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இந்த சம்பவத்தில் பிரவியா உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவல் அறிந்த பட்டாம்பி போலீசார் உடலை கைப்பற்றி பட்டாம்பி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் பிரவியா ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆனவர். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அவரும், ஆலூர் பகுதியை சேர்ந்த சந்தோஷ் (43) என்பவரும் ஒரு கடையில் ஊழியராக பணிபுரிந்து வந்து உள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இது கள்ளக்காதலாக மாறியது.

சந்தோசுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். பின்னர் அந்த வேலையில் இருந்து பிரவியா நின்று விட்டார். மேலும் கள்ளக்காதலை அறிந்த சந்தோசின் மனைவி, கணவரை பிரிந்து சென்று விட்டார். இதைத்தொடர்ந்து பிரவியாவுக்கு வேறொரு நபருடன் நிச்சயதார்த்தம் செய்யப்பட்டது. இதனால் அவர் சந்தோசுடன் பழகுவதை தவிர்த்து வந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர் பிரவியாவை நடுரோட்டில் வைத்து எரித்து கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது.

மேலும் தப்பியோடிய சந்தோஷ் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். பின்னர் அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாலக்காடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story