நாட்டை ஆட்சி செய்வது தனது பிறப்புரிமை என ராகுல்காந்தி நினைக்கிறார் - பாஜக கடும் தாக்கு


நாட்டை ஆட்சி செய்வது தனது பிறப்புரிமை என ராகுல்காந்தி நினைக்கிறார் - பாஜக கடும் தாக்கு
x

நாட்டை ஆட்சி செய்வது தனது பிறப்புரிமை என்று ராகுல்காந்தி நினைப்பதாக பாஜக விமர்சனம் செய்துள்ளது.

டெல்லி,

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது பிரதமர் நரேந்திரமோடி, நீரவ் மோடி, லலித் மோடியை குறிப்பிட்டு 'அனைத்து திருடர்களின் பெயரும் மோடி என்று முடிகிறது ஏன்? என்று கேள்வி எழுப்பினார்.

மோடி சமூகம் குறித்து அவதூறு ஏற்படுத்தும் என்ற வகையில் பேசியதாக கூறி ராகுல்காந்தி மீது பாஜகவை சேர்ந்த எம்.எல்.ஏவும், முன்னாள் மந்திரியுமான பூர்னேஷ் மோடி, குஜராத் சூரத் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்ற இந்த வழக்கில் கடந்த 24-ம் தேதி ராகுல் காந்தியை குற்றவாளியாக அறிவித்து அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி கோர்ட்டு தீர்ப்பளித்தது. அதேவேளை, இந்த வழக்கில் மேல்முறையீடு செய்ய ராகுல்காந்திக்கு அவகாசம் வழங்கி 30 நாட்கள் ஜாமினும் வழங்கியது.

அவதூறு வழக்கில் ராகுல்காந்தி குற்றவாளி என அறிவிக்கப்பட்டதால் அவரது எம்.பி. பதவி பறிக்கப்பட்டது. மேலும், ஏப்ரல் 22-ம் தேதிக்குள் அரசு பங்களாவில் இருந்து காலி செய்யும்படியும் ராகுல்காந்திக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இதனிடையே, ராகுல்காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்களும் நடைபெற்று வருகிறது. அதேவேளை, இந்த விவகாரத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் அமளியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், மத்திய மந்திரியும் பாஜக மூத்த தலைவருமான அஸ்வினி வைஷ்னவ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,

ஒரு குடும்பத்தில் பிறந்ததால் நாட்டை ஆட்சி செய்வது அவரது பிறப்புரிமை என்று ராகுல்காந்தி நினைக்கிறார். அரசியல் தனது உரிமை என்றும் தான் அரசியலமைப்பு, நீதிமன்றம், நாடாளுமன்றத்திற்கு மேலானவர் என்றும் ராகுல்காந்தி தன்னை நினைத்துக்கொண்டிருகிறார்.


Next Story