மாட்டு தொழுவத்தில் 52 குட்டிகளுடன் பதுங்கியிருந்த ராஜநாகம்.. விவசாயி அதிர்ச்சி


மாட்டு தொழுவத்தில் 52 குட்டிகளுடன் பதுங்கியிருந்த ராஜநாகம்.. விவசாயி அதிர்ச்சி
x

பொக்லைன் எந்திரம் மூலம் மண்ணுக்குள் தோண்டி பார்த்த போது உள்ளே பெரிய ராஜநாகம் ஒன்று இருந்தது.

கோட்டயம்,

கேரள மாநிலம் கோட்டயம் பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். விவசாயி. இவரது வீட்டின் அருகில் மாட்டு தொழுவம் ஒன்று உள்ளது. ஆனால் ராதாகிருஷ்ணன் தற்போது மாடுகள் எதுவும் வளர்க்கவில்லை. இதனால் அந்த தொழுவம் காலியாக கிடந்தது.

இந்தநிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அவரது வீட்டின் முன்பு 2 குட்டி பாம்புகள் ஊர்ந்து சென்றன. இதனை பார்த்த ராதாகிருஷ்ணன், அந்த பாம்புகள் செல்லும் இடத்தை நோக்கி பின்தொடர்ந்து சென்றார். அப்போது அவை அவரது மாட்டு தொழுவத்துக்குள் சென்று, மண்ணுக்குள் பதுங்கியது. இதையடுத்து தொழுவத்தில் அவர் சோதனை செய்தார். அங்கு சுமார் 40-க்கும் மேற்பட்ட குட்டி பாம்புகள் இருந்தன. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக கோட்டயம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

அதன்பேரில் வனத்துறையினர், பாம்புகள் பிடிக்கும் குழுவினருடன் சம்பவ இடத்துக்கு சென்றனர். அப்போது மாட்டு தொழுவத்தில் தோண்டி பார்த்தனர். அதில் சில பாம்புகள் மட்டுமே பிடிபட்டன. அதைத்தொடர்ந்து பொக்லைன் எந்திரம் மூலம் மண்ணுக்குள் தோண்டி பார்த்தனர். அப்போது உள்ளே பெரிய ராஜநாகம் ஒன்று இருந்தது. மேலும் அங்கு இருந்த குட்டி பாம்புகள், ராஜநாகத்தின் குட்டிகள் என்பது தெரியவந்தது.

பெரிய ராஜநாகத்துடன், 52 குட்டிகள் பதுங்கியிருந்தன. அவற்றில் 47 குட்டிகள் உயிருடனும், 5 குட்டிகள் இறந்த நிலையிலும் இருந்தன. இதைத்தொடர்ந்து பெரிய ராஜநாகத்தை சாக்குப்பையிலும், அவற்றின் குட்டிகளை பிளாஸ்டிக் பாட்டிலுக்குள் அடைத்தும் வனத்துறையினர் பிடித்து சென்றனர்.

இதுகுறித்து வனத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "ராஜநாகம் அதிகபட்சமாக 30 முதல் 40 முட்டைகள் இட்டு, குட்டிகளை பொரிக்கும். ஆனால் தற்போது பிடிபட்ட ராஜநாகம், 52 குட்டிகளை பொரித்துள்ளது. அவற்றில் 5 குட்டிகள் இறந்துவிட்டன. பிடிபட்ட பாம்புகளை அடர்ந்த வனப்பகுதிக்கு கொண்டுபோய் விட முடிவு செய்துள்ளோம்" என்றார்.

மாட்டு தொழுவத்தில் ராஜநாகத்துடன், 52 குட்டிகள் பிடிபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story