டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரி கம்ப்யூட்டர் முடக்கத்தின் பின்னணியில் சதி- மத்திய மந்திரி ராஜீவ் சந்திரசேகர்


டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரி கம்ப்யூட்டர் முடக்கத்தின் பின்னணியில் சதி- மத்திய மந்திரி ராஜீவ் சந்திரசேகர்
x

டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரியின் கம்ப்யூட்டர் முடக்கத்தின் பின்னணியில் சதி இருப்பதாக மத்திய மந்திரி ராஜீவ் சந்திரசேகர் கூறியுள்ளார்.

'ஹேக்கர்கள்' கைவரிசை

நாட்டின் மிக முக்கிய ஆஸ்பத்திரிகளில் ஒன்றான டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரியின் பிரதான கம்ப்யூட்டர் (சர்வர்) கடந்த 23-ந்தேதி திடீரென முடங்கியது. ரான்சம்வேர் எனப்படும் ைவரஸ் மூலம் ஹேக்கர்கள் நடத்திய கைவரிசையால் சர்வர் செயலிழந்து விட்டது. இந்த முடக்கத்தை விடுவிப்பதற்கு ரூ.200 கோடி கிரிப்டோகரன்சியில் தர வேண்டும் என அவர்கள் மிரட்டலும் விடுத்து இருந்தனர். இந்த முடக்கத்தால் ஆஸ்பத்திரியில் ஏராளமான பணிகள் முடங்கி உள்ளன. அவசர வார்டு, வெளிநோயாளிகள், உள்நோயாளிகள் மற்றும் ஆய்வக பிரிவுகளில் நோயாளி சேவைகள் அனைத்தும் ஊழியர்கள் மூலம் நிர்வகிக்கப்படுகின்றன,

10-வது நாளாக முடக்கம்

ஹேக்கர்களால் முடங்கிய சர்வரை சரி செய்வதற்கான பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளது. ஆனால் இதுவரை அது முடியவில்லை. இதனால் 10-வது நாளாக நேற்றும் ஆஸ்பத்திரியில் பணிகள் பெரும் நெருக்கடியை சந்தித்தன.

மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆஸ்பத்திரி கம்ப்யூட்டர்களின் இணையதள இணைப்பும் துண்டிக்கப்பட்டு இருக்கிறது.

ஹேக்கர்களின் இந்த தாக்குதல் குறித்து இந்திய கம்ப்யூட்டர் எமர்ஜென்சி மீட்புக்குழு, தேசிய புலனாய்வுப்பிரிவு மற்றும் பல்வேறு விசாரணை அமைப்புகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றன.

முக்கியத்துவம் வாய்ந்த சக்திகள்

இந்த நிலையில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி சர்வர் மீதான ரான்சம்வேர் தாக்குதலுக்கு பின்னணியில் சதி இருப்பதாக மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை இணை மந்திரி ராஜீவ் சந்திரசேகர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், 'இது ஒரு சதி என்பது தெளிவாகிறது. அத்துடன் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சக்திகளால் இது திட்டமிடப்பட்டு உள்ளது. இது ஒரு அதிநவீன ரான்சம்வேர் தாக்குதல் ஆகும். இதற்கு பின்னால் யார் இருக்கிறார்கள் என்ற முடிவுக்கு வருவதற்கு முன், இந்திய கம்ப்யூட்டர் எமர்ஜென்சி மீட்புக்குழு மற்றும் தேசிய புலனாய்வு நிறுவனம் ஆகியவற்றின் முடிவுக்காக நாங்கள் காத்திருப்போம்' என்று ெதரிவித்தார்.

பயங்கரவாத பின்னணி

மேலும் அவர், 'இது முதலாவது தாக்குதல் முயற்சியாக இருக்காது. அதேநேரம் கடைசியாகவும் இருக்காது. பயங்கரவாதத்தின் பின்னணி கொண்ட இந்த நிறுவனங்கள் குறித்து எப்போதும் கவனமாக இருக்க வேண்டும். அவர்கள் ஒரு முறை மட்டுமே வெற்றிபெற முடியும். நமது அமைப்புகளும் செயல்முறைகளும் பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்ய வேண்டும்.

குறிப்பாக நமது பொருளாதாரம் மற்றும் நமது வணிகங்கள் மற்றும் செயல்பாடுகளின் டிஜிட்டல் மயமாக்கல் தீவிரமடைந்து வரும் இந்த சகாப்தத்தில் கூடுதல் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்' என்றும் கூறினார்.


Next Story