அடக்குமுறையின் கருவியாக சட்டம் மாறாமல் இருப்பதை உறுதிசெய்வோம் - தலைமை நீதிபதி சந்திரசூட்


அடக்குமுறையின் கருவியாக சட்டம் மாறாமல் இருப்பதை உறுதிசெய்வோம் -  தலைமை நீதிபதி சந்திரசூட்
x

சட்டம், அடக்குமுறையின் கருவியாக மாறாமல் இருப்பதை உறுதி செய்வது, முடிவு செய்யும் இடத்தில் உள்ள நம் அனைவரின் பொறுப்பு என்று சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கூறினார்.

மக்களிடம் எதிர்பார்ப்புகள்

டெல்லியில் ஆங்கில நாளிதழ் ஒன்று, ஏற்பாடு செய்திருந்த தலைமைத்துவம் பற்றிய மாநாட்டில் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

மக்களிடம் இருந்து எதிர்பார்ப்புகளை நாம் பெற்றிருப்பது என்பது மகத்தானது. ஆனால், நிறுவனங்கள் என்ற வகையில் கோர்ட்டுகளின் வரம்புகளையும், ஆற்றல்களையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

சில நேரங்களில் சட்டமும், நீதியும் ஒரே நேர் கோட்டுப்பாதையைப் பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை.

உறுதிசெய்வது நம் பொறுப்பு....

சட்டம் என்பது நீதிக்கான கருவியாக இருக்க முடியும். ஆனால், அடக்குமுறைக்கான கருவியாகவும் சட்டம் இருக்க முடியும். இன்றைக்கு சட்டப் புத்தகங்களில் உள்ள அதே சட்டம், காலனித்துவ ஆட்சிக்காலத்தில் அடக்குமுறையின் கருவியாக எப்படிப் பயன்படுத்தப்பட்டது என்பதை நாம் அறிவோம்.

எனவே சட்டம், நீதிக்கான கருவியாகவும், அடக்குமுறைக்கான கருவியாக இல்லாமல் இருக்கவும் நாம் எவ்வாறு உறுதி செய்வது என்பதை அறிந்திருக்கிறோம். நீதிபதிகள் மட்டுமல்லாமல், முடிவு எடுக்கிற இடங்களில் உள்ள அனைவரும், சட்டத்தை எவ்வாறு கையாள்கிறோம் என்பது முக்கியம். சட்டம் அடக்குமுறையின் கருவியாக மாறாமல் இருப்பதை உறுதி செய்வது முடிவு எடுக்கிற அனைவரின் பொறுப்பு ஆகும்.

உங்கள் பணியை உண்மையாகச் செய்ய...

நீதித்துறையின் கேட்கப்படாதவர்களின் குரல்களை கேட்கிற திறன் உங்களுக்கு இருந்தால், பார்க்கப்படாத முகங்களை பார்க்கிற திறன் உங்களுக்கு இருந்தால், சட்டத்துக்கும் நீதிக்கும் இடையே சம நிலை எங்கே உள்ளது என்பதைப் பார்க்க வேண்டும். அப்போது ஒரு நீதிபதியாக நீங்கள் உங்கள் பணியை உண்மையாகச் செய்ய முடியும்.

சமூக ஊடகம், மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது. கோர்ட்டுகளில் ஒரு நீதிபதி கூறுகிற ஒவ்வொரு சிறிய வார்த்தைகூட கண நேரத்தில் உடனே வெளியிடப்பட்டு விடுகிறது. நீங்கள் ஒரு நீதிபதியாக தொடர்ந்து மதிப்பிடப்படுகிறீர்கள்.

நம்பிக்கை...

உங்களில் வக்கீல்களாக இருப்பவர்கள், கோர்ட்டு உரையாடலின் போது நீதிபதி கூறும் அனைத்தும் அவரது மனதையோ அல்லது வரவிருக்கும் இறுதி முடிவையோ பிரதிபலிக்கவில்லை என்று உங்கள் சக வக்கீல்களிடம் கூற முடியும். கோர்ட்டுகளில் வக்கீல்கள் தாராளமாக வார்த்தைகளை பயன்படுத்துவார்கள். அவர்களுக்கும் நீதிபதிகளுக்கும் இடையே நடக்கிற உரையாடல், உண்மையை வெளியே கொண்டு வருவதற்கான ஒரு முயற்சி ஆகும்.

நாம் இணையதள யுகத்தில் வாழ்கிறோம். எனவே இங்கே சமூக ஊடகம் தொடர்ந்து இருக்கும்.

எனவே நாம் வாழும் காலத்தின் சவால்களை எவ்வாறு எதிர்கொள்கிறோம் என்பதைப் புரிந்துகொள்வதில் நமது பங்கை நாகரீகப்படுத்த வேண்டும். புதிய தீர்வுகளைக் கண்டறியவும் வேண்டும். திரும்பப் பெறவும், மறுபரிசீலனை செய்யவும் வேண்டும் என்று நான் நம்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story