தார்வாரில் தனியார் பள்ளி ஆசிரியையிடம் ரூ.21 லட்சம் மோசடி
![தார்வாரில் தனியார் பள்ளி ஆசிரியையிடம் ரூ.21 லட்சம் மோசடி தார்வாரில் தனியார் பள்ளி ஆசிரியையிடம் ரூ.21 லட்சம் மோசடி](https://media.dailythanthi.com/h-upload/2023/09/20/1517927-mosadi02.webp)
தார்வாரில் பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக கூறி தனியார் பள்ளி ஆசிரியையிடம் ரூ. 21 லட்சத்தை மர்மநபர் மோசடி செய்துள்ளார்.
தார்வார்-
தார்வாரில் பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக கூறி தனியார் பள்ளி ஆசிரியையிடம் ரூ. 21 லட்சத்தை மர்மநபர் மோசடி செய்துள்ளார்.
தனியார் பள்ளி ஆசிரியை
தார்வார் (மாவட்டம்) டவுன் வித்யாகிரி பகுதியை சேர்ந்தவர் ரேஷ்மா (வயது32). இவருக்கு திருமணமாகி கணவர் மற்றும் குழந்தைகள் உள்ளனர். ரேஷ்மா தார்வாரில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இந்தநிலையில் ரேஷ்மா செல்போன் எண்ணிற்கு குறுந்தகவல் ஒன்று வந்தது. அதில், பணத்தை முதலீடு செய்தால் இரட்டிப்பாக்கி தருவதாக இருந்தது.
இதையடுத்து, அதில் இருந்த லிங்கில் ரேஷ்மா சென்றார். அதில் கேட்கப்பட்ட அனைத்து தகவல்களையும் அவர் கூறினார். இதையடுத்து ரேஷ்மா செல்போனுக்கு மர்மநபர் ஒருவர் தொடர்பு கொண்டு பேசினார். அதில் எனது பெயர் ரசேல் என்றும், தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறேன் என்றும் கூறினார்.
பணம் முதலீடு
மேலும் எங்கள் நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்தால் இரட்டிப்பாக்கி தருவதாகவும் கூறியுள்ளார். இதனை ரேஷ்மா நம்பியுள்ளார். இதையடுத்து மர்மநபர் கூறிய வங்கி கணக்கிற்கு அவர் ரூ. 50 ஆயிரம் அனுப்பினார். பின்னர்் ரேஷ்மாவிற்கு ரூ. 1 லட்சம் கிடைத்தது. மீண்டும் ரேஷ்மா அந்த நபருக்கு ரூ. 1 லட்சம் அனுப்பினார்.
அவருக்கு ரூ. 2 லட்சம் கிடைத்தது. இதையடுத்து ரேஷ்மா பல்வேறு தவணைகளாக மர்மநபரின் வங்கி கணக்கிற்கு ரூ. 21 லட்சம் வரை அனுப்பி உள்ளார். ஆனால் மர்மநபர் கூறியபடி பணத்தை இரட்டிப்பாக்கி கொடுக்கவில்லை.
இதையடுத்து ரேஷ்மா அந்த நபரை தொடர்பு கொண்டார். அப்போது அவரது எண் சுவிட்ச்- ஆப் என வந்தது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அவர் உணர்ந்தார்.
விசாரணை
இதுகுறித்து ரேஷ்மா உப்பள்ளி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் மர்மநபரையும் தேடி வருகிறார்கள்.