சபரிமலை மண்டல பூஜை: பக்தர்கள் தங்குவதற்கான ஏற்பாடுகளை உறுதி செய்ய வேண்டும் - கேரள ஐகோர்ட் உத்தரவு


சபரிமலை மண்டல பூஜை: பக்தர்கள் தங்குவதற்கான ஏற்பாடுகளை உறுதி செய்ய வேண்டும் - கேரள ஐகோர்ட் உத்தரவு
x

சபரிமலையில் நடைபெறும் மண்டல பூஜையில் பங்கேற்க வரும் பக்தர்களுக்கான தங்கும் ஏற்பாடுகளை உறுதி செய்ய கேரள ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

திருவனந்தபுரம்,

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மகரவிளக்கு பூஜை காலம் வரும் 17-ந்தேதி முதல் துவங்குகிறது. இதற்காக பல்வேறு மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வருகை தருவது வழக்கம். அவ்வாறு வரும் பக்தர்கள், வரும் வழியில் திருவிதாங்கூர் மற்றும் கொச்சி தேவசம்போர்டு கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் தங்கி இளைப்பாறிச் செல்ல ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.

இந்த இடங்கள் எடத்தவலம் என அழைக்கப்படுகின்றன. இந்நிலையில் பக்தர்கள் தங்குவதற்கு உரிய ஏற்பாடுகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என சபரிமலை ஐயப்பன் கோவிலின் சிறப்பு ஆணையர் கேரள ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்திருந்தார்.

இதன் அடிப்படையில் கேரள ஐகோர்ட் தானாக முன்வந்து இந்த விவகாரத்தை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. விசாரணையில் சபரிமலைக்கு வரும் பக்தர்கள் வழியில் இருக்கும் எடத்தவலங்களில் தங்கும் ஏற்பாடுகளை திருவிதாங்கூர் மற்றும் கொச்சி தேவசம்போர்டு உறுதி செய்ய வேண்டும் என கேரள ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.


Next Story