சனா-லிசா செயற்கை நுண்ணறிவு செய்தி வாசிப்பாளர்கள்...!


சனா-லிசா செயற்கை நுண்ணறிவு செய்தி வாசிப்பாளர்கள்...!
x
தினத்தந்தி 11 July 2023 5:51 AM GMT (Updated: 11 July 2023 6:41 AM GMT)

செயற்கை நுண்ணறிவு செய்தி அறிவிப்பாளர்களைப் பயன்படுத்துவதன் மூலம் பல ஊடக நிறுவனங்கள் பணத்தைச் சேமிக்கலாம்.

சென்னை

செயற்கை நுண்ணறிவு என்பது தொழில்நுட்பத்தில் மிகவும் பிரபலமான வார்த்தைகளில் ஒன்றாகும். செயற்கை நுண்ணறிவு என்பது கணினி, கணினியால் கட்டுப்படுத்தப்படும் ரோபோ அல்லது மென்பொருளை மனித மனதைப் போலவே புத்திசாலித்தனமாக சிந்திக்க வைக்கும் செயல்முறையாகும்.

மனித மூளையின் வடிவங்களைப் படிப்பதன் மூலமும், அறிவாற்றல் செயல்முறையை பகுப்பாய்வு செய்வதன் மூலமும் இது நிறைவேற்றப்படுகிறது. இந்த ஆய்வுகளின் விளைவாக அறிவார்ந்த மென்பொருள் மற்றும் அமைப்புகளை உருவாக்குகிறது.

இந்த தொழில்நுட்பத்தால் ஏற்கனவே ஏற்பட்ட தீங்குகளையும், இனி வர இருக்கும் ஆபத்துக்களையும் நினைவில் கொள்ள வேண்டும். கிட்டத்தட்ட தற்சமயம் வரை நான்கில் ஒரு பங்கு வேலைவாய்ப்புகள் இதனால் மாயமாய் மறைந்துள்ளன.

சமூகத்தில் செய்திகளை மக்களுக்கு கொண்டு சேர்க்கும் ஊடகங்களின் பணி அளவிட முடியாதது. தற்போது செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட செய்தியாளர்கள் இனி வர உள்ளனர்.

இந்தியாவின் முன்னணி தேசிய ஊடகமான ஆஜ் தக் நாட்டின் சனா என்ற முதல் செயற்கை நுண்ணறிவு செய்தியாளரை அறிமுகப்படுத்தியது. சனா ஒரு புத்திசாலி, அழகான, இளம் செயற்கை நுண்ணறிவு செய்தி நிருபர்.

நாட்டின் முதல் செயற்கை நுண்ணறிவு செய்தி தொகுப்பாளரான சனா, பிரதமர் நரேந்திர மோடியை நேர்காணலுக்கு அழைத்துள்ளார்.

சனா பிரதமருடன் பேசும் வீடியோவையும், வானிலை அறிக்கையை சனா வழங்கும் வீடியோவையும் தேசிய ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

அதில் 2024ல் பேட்டி கொடுப்பீர்களா என பிரதமரிடம் சனா கேட்டுள்ளார். இந்தியாவில் அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. செயற்கை நுண்ணறிவை ஊக்குவிக்கும் நபராக பிரதமர் அறியப்படுகிறார் என்றும் சனா வீடியோவில் கூறுகிறார்.

சனா சரளமான ஆங்கிலத்தில் பதிலளித்தார். வரும் காலங்களில் செயற்கை நுண்ணறிவு செய்தி அறிவிப்பாளர்கள் மிகவும் பரவலாக மாற வாய்ப்புள்ளது.

அதுபோல் ஒடிசா மாநிலத்தில் தனியார் சேனல் ஒன்று செயற்கை நுண்ணறிவு அடிப்படையில் உருவாக்கப்பட்ட செய்தி வாசிப்பாளர் மூலம் செய்திகளை ஒளிபரப்பி உள்ளது. செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட அந்த செய்தி வாசிப்பாளர், ஆங்கிலம் மற்றும் ஒடியா என இரு மொழிகளிலும் செய்திகளை படித்தார். அந்த செய்தி வாசிப்பாளருக்கு லிசா என பெயரிட்டுள்ளதாகவும் அத்தொலைக்காட்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

லிசாவால் பல மொழிகளிலும் செய்திகளை படிக்க முடியும் என்றும் ஒடியா மொழியை இன்னும் தெளிவாக வாசிக்க கற்றுக்கொடுக்க தொழில்நுட்ப முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உள்ளிட்ட சமூக தளங்களிலும் செயற்கை நுண்ணறிவு செய்தி வாசிப்பாளர் லிசாவை பின் தொடரலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செயற்கை நுண்ணறிவு செய்தி அறிவிப்பாளர்களைப் பயன்படுத்துவதன் மூலம் பல ஊடக நிறுவனங்கள் பணத்தைச் சேமிக்கலாம். அதே நேரத்தில், அது நெறிமுறை மற்றும் பொறுப்புடன் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டியதன் அவசியத்தை கவனத்தில் கொள்ளவேண்டும்.

முன்னதாக 2018 இல், சீனாவின் சின்ஹுவா செய்தி நிறுவனம் கணினி வரைகலையைப் பயன்படுத்தி செயற்கை நுண்ணறிவால் இயங்கும் ஆண் செய்தி வாசிப்பாளர்களை அறிமுகப்படுத்தியது. சமீபத்தில், ரஷ்யாவின் ஸ்வோய் டிவி ஸ்நேஷானா துமனோவா என்ற செயற்கை நுண்ணறிவு வானிலை அறிவிப்பாளரை அறிமுகப்படுத்தியது.


Next Story