நீதிபதிகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் வழக்கு நவம்பர் 15-ந்தேதி விசாரணை: சுப்ரீம் கோர்ட்டு


நீதிபதிகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் வழக்கு நவம்பர் 15-ந்தேதி விசாரணை:  சுப்ரீம் கோர்ட்டு
x

நீதிபதிகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் வழக்குகளை வரும் நவம்பர் 15-ந்தேதி விசாரணைக்கு எடுத்து கொள்ள சுப்ரீம் கோர்ட்டு முடிவு செய்துள்ளது.



புதுடெல்லி,



சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், ஏ.எஸ். ஓகா மற்றும் விக்ராம் நாத் அடங்கிய அமர்வு, கோர்ட்டின் பொது செயலாளருக்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்து உள்ளது.

கடந்த 2014-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதிக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு பற்றி, சட்ட பயிற்சி மேற்கொண்ட ஒருவரின் மனுவை சுப்ரீம் கோர்ட்டு விசாரணைக்கு எடுத்து கொண்டுள்ளது.

ஆனால், இந்த வழக்கில் கோர்ட்டின் பொது செயலாளர் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யவில்லை என மூத்த வழக்கறிஞரான இந்திரா ஜெய்சிங் கோர்ட்டில் தெரிவித்து உள்ளார். இதனை தொடர்ந்தே, இந்த வழக்கில் 4 வாரங்களுக்குள் இதற்கு பதிலளிக்கும்படி நீதிமன்ற அமர்வு, கோர்ட்டின் பொது செயலாளருக்கு உத்தரவு பிறப்பித்து உள்ளது.

இதனை தொடர்ந்து, இந்த வழக்கை வருகிற நவம்பர் 15-ந்தேதிக்கு ஒத்தி வைத்து நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டு உள்ளது.

அடிப்படையற்ற, மோசடியான மற்றும் தூண்டுதலின் பேரில் வழக்கு தொடுக்கப்பட்டு உள்ளது என குற்றச்சாட்டு கூறப்பட்ட நீதிபதி கூறியதுடன், அதனை மறுக்கவும் செய்துள்ளார். இதேபோன்று, பாதிக்கப்பட்ட நபர் கூறும் குற்றச்சாட்டுகளை ஊடகங்கள் வெளியிடுவதற்கு எதிராகவும் கோர்ட்டில் அவர் தடைஉத்தரவு பெற்றுள்ளார்.

2014-ம் ஆண்டில் இந்த வழக்கு விசாரணையின்போது, பணியில் உள்ள அல்லது ஓய்வு பெற்ற நீதிபதிகள், அவர்கள் பதவியில் இருக்கிறார்களோ அல்லது இல்லையோ, அனைத்து நீதிமன்ற அதிகாரிகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் புகார்கள் மீது விசாரணை நடத்துவதற்கு இன்றைய தேதி வரை எந்தவொரு நடைமுறையும் இல்லை என்றும் சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்து இருந்தது.


Next Story