

சண்டிகர்,
அரியானாவின் ரோக்தக் நகரில் உள்ள மகரிஷி தயானந்த பல்கலை கழகத்தின் வளாகத்தில் இரு குழுக்கள் தனித்தனியாக கார்களில் வந்துள்ளனர். இதில், ஒரு காரானது விபத்தில் சிக்கியுள்ளது. இந்நிலையில் ஒரு காரில் இருந்த இளைஞர், மற்றொரு காரை நோக்கி திடீரென துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தி உள்ளார்.
இந்த சம்பவத்தில் 4 பேர் காயமடைந்து உள்ளனர். அவர்களில் ஒருவர் முன்னாள் மாணவர் தலைவராவார் என கூறப்படுகிறது. இந்த துப்பாக்கி சூடு தாக்குதலுக்கான காரணம் பற்றி தெரியவில்லை என காவல் அதிகாரி பிரமோத் கவுதம் கூறியுள்ளார்.
அரியானா கவர்னர் பண்டாரு தத்தாத்ரேயா, பல்கலை கழகத்தில் நடந்த, துறை வளர்ச்சி மையத்தின் தொடக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டு புறப்பட்டு சென்ற பின்பு இந்த சம்பவம் நடந்து உள்ளது. இரு குழுக்களுக்கு இடையே பண விவகாரத்தில் மோதல் நடைபெற்றிருக்க கூடும் என கூறப்படுகிறது. இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.