ஆங்கிலேய ஆட்சியாளர்களிடம் சாவர்க்கர் மன்னிப்பு கேட்டதை ராகுல் காந்தி நிரூபிக்க வேண்டும் - பேரன் ரஞ்சித் சாவர்க்கர் சவால்


ஆங்கிலேய ஆட்சியாளர்களிடம் சாவர்க்கர் மன்னிப்பு கேட்டதை ராகுல் காந்தி நிரூபிக்க வேண்டும் - பேரன் ரஞ்சித் சாவர்க்கர் சவால்
x

ஆங்கிலேய ஆட்சியாளர்களிடம் சாவர்க்கர் மன்னிப்பு கேட்டதை ராகுல்காந்தி நிரூபிக்க வேண்டும் என்று பேரன் ரஞ்சித் சாவர்க்கர் சவால் விடுத்துள்ளார்.

மன்னிப்பு கேட்டார், சாவர்க்கர்

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான இந்திய ஒற்றுமை நடைபயணம் மேற்கொண்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மராட்டிய மாநிலம் ஹிங்கோலியில் பழங்குடியின மக்கள் மத்தியில் பேசும்போது, "அந்தமான் சிறையில் இருக்கும்போது ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்கு சாவர்க்கார் ஒரு கடிதம் எழுதினார். அந்த கடிதத்தில் அவர் தன்னை விடுவிக்குமாறு மன்றாடியிருந்தார். இதேபோல் சாவர்க்கர் ஆங்கிலேயே ஆட்சியாளர்களிடம் பென்ஷன் பெற்றார். சிறையில் இருந்து வந்த பின்னர் அவர் ஆங்கிலேயே படைகளில் சேர்ந்தார்" என கூறியிருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் சாவர்க்கரின் பேரன் ரஞ்சித் சாவர்க்கர், "கடந்த 2017-ம் ஆண்டு முதல் ராகுல் காந்தி தொடர்ந்து என் தாத்தாவை அவமதித்து பேசி வருகிறார். அவர் ஒரு சுதந்திர போராட்ட வீரர். ஆனால் வாக்கு வங்கி அரசியலுக்காக காங்கிரஸ் கட்சி வீர சாவர்க்கரை அவமதித்து வருகிறது. ராகுல் காந்தி மீது போலீசில் புகார் அளிப்பேன்" என்று கூறியிருந்தார்.

மீண்டும் பரபரப்பை ஏற்படுத்திய ராகுல்காந்தி

இந்தநிலையில் பிரதமர் மோடி பற்றி அவதூறாக பேசிய வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து ராகுல்காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டது.

இதையடுத்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ராகுல் காந்தி, "மன்னிப்பு கேட்க நான் சாவர்க்கர் அல்ல. நான் ராகுல் காந்தி. யாரிடமும் காந்தி மன்னிப்பு கேட்டதில்லை" என்று பேசி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

ராகுல்காந்தி பேச்சுக்கு பா.ஜனதாவினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்தநிலையில் சாவர்க்கரின் பேரனான ரஞ்சித் சாவர்க்கர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

நிரூபிக்க வேண்டும்

மன்னிப்பு கேட்க தான் சாவர்க்கர் அல்ல என்று ராகுல்காந்தி கூறியுள்ளார். ஆங்கிலேய ஆட்சியாளர்களிடம் சாவர்க்கர் மன்னிப்பு கேட்டார் என்பதற்கான ஆவணங்களை காட்டி அதனை நிரூபிக்க வேண்டும் என்று நான் அவருக்கு சவால் விடுகிறேன்.

அவர் செய்வது எல்லாம் குழந்தைத்தனம் போன்று உள்ளது. அரசியலில் முன்னேற வேண்டும் என்பதற்காக, தேசப் பற்றாளர்களின் பெயர்களை அவமதிப்பது ஏற்கத்தக்கது அல்ல. ராகுல்காந்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்துத்வா கொள்கையாளரும், சுதந்திர போராட்ட வீரருமான சாவர்க்கர் மராட்டியத்தை சேர்ந்தவர். அவர் மீதான ராகுல்காந்தியின் கருத்து காரணமாக மராட்டியத்தில் கூட்டணியில் உள்ள காங்கிரஸ், உத்தவ் தாக்கரே கட்சி இடையே கருத்து மோதல் ஏற்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story