ஷ்ர்த்தாவை வெட்டியதுபோல உன்னையும் 70 துண்டுகளாக வெட்டிவிடுவேன்" - லிவ் இன் பார்ட்னருக்கு மிரட்டல்


ஷ்ர்த்தாவை வெட்டியதுபோல உன்னையும் 70 துண்டுகளாக வெட்டிவிடுவேன் - லிவ் இன் பார்ட்னருக்கு மிரட்டல்
x

டெல்லியில் ஷ்ர்த்தாவை 35 துண்டுகளாக வெட்டிக் கொலை செய்ததுபோல் உன்னை 70 துண்டுகளாக வெட்டிவிடுவேன்’ என்று சேர்ந்து வாழ்ந்தர் மிரட்டி உள்ளார்.

மும்பை

மும்பையைச் சேர்ந்த ஷ்ரத்தா என்ற பெண் கடந்த மே மாதம் டெல்லியில் கொலைசெய்யப்பட்டு 35 துண்டுகளாகக் காதலனால் வெட்டப்பட்ட அதிர்ச்சி சம்பவத்திலிருந்து இன்னும் மக்கள் மீளாமல் இருக்கின்றனர். இந்த நிலையில், டெல்லியில் மற்றொரு பெண் சமீபத்தில் தன் மகனுடன் சேர்ந்து தன்னுடைய கணவனைக் கொலைசெய்து 22 துண்டுகளாக வெட்டி, டெல்லி முழுக்க விட்டெறிந்தார். தற்போது இந்தச் சம்பவங்களை மேற்கோள்காட்டி, `அது போன்று செய்துவிடுவேன்' என்று தன்னுடன் திருமணம் செய்துகொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்த பெண்ணை ஒருவர் மிரட்டியிருக்கிறார்.

மராட்டிய மாநிலம், துலே பகுதியைச் சேர்ந்த அர்ஷத் சலீம் மாலிக் என்பவருடன் கடந்த ஆண்டு ஜூலை மாதத்திலிருந்து ஒரு பெண் திருமணம் செய்துகொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்துவந்தார்.

அந்தப் பெண்ணுக்கு ஏற்கெனவே திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. ஆனால், அவரின் முதல் கணவர் சாலை விபத்தில் இறந்துவிட்டார்.

அந்தப் பெண்ணை முதலில் சந்தித்தபோது அர்ஷத் தன் பெயரை ஹர்ஷல் மாலி என்று அறிமுகப்படுத்திக்கொண்டார். இருவரும் சேர்ந்து துலேயிலுள்ள வனப்பகுதியைச் சுற்றிப்பார்க்கச் சென்றபோது அந்தப் பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்து, அதை வீடியோ எடுத்துக்கொண்டார் என்றும் சொல்லப்படுகிறது.

இதையடுத்து இருவரும் சேர்ந்து வாழ்வது என்று முடிவுசெய்தனர். இதற்காக ஒப்பந்தம் தயாரிப்பதற்காக அமல்னர் என்ற கிராமத்துக்குச் சென்றனர். அங்கு சென்ற பிறகுதான் ஹர்ஷலின் உண்மையான பெயர் அர்ஷத் என்று தெரியவந்தது. ஆனாலும் இருவரும் சேர்ந்து வாழ முடிவுசெய்தனர். இருவரும் ஒஸ்மனாபாத்தில் ஒரு வீடு எடுத்துத் தங்கினர்.

அதன் பிறகு அந்தப் பெண்ணை மதம் மாறச்சொல்லி கட்டாயப்படுத்தி அர்ஷத் சித்ரவதை செய்துவந்தார். இது தொடர்பாக அந்தப் பெண் போலீசில் புகார் அளித்துள்ளார்.

அதில், ``ஒஸ்மனாபாத்திலிருந்து நான்கு மாதம் கழித்து துலேவுக்கு வந்தோம். அங்கு வந்ததிலிருந்து என்னை இஸ்லாம் மதத்துக்கு மாறும்படி கட்டாயப்படுத்திவந்தார். அதோடு எனக்கு முதல் திருமணத்தில் பிறந்த குழந்தையையும் இஸ்லாம் மதத்துக்கு மாற்ற முயற்சி செய்தார்.

இஸ்லாம் மதத்துக்கு மாற மறுத்ததால் `டெல்லியில் ஷ்ரத்தாவை 35 துண்டுகளாக வெட்டிக் கொலை செய்ததுபோல் உன்னை 70 துண்டுகளாக வெட்டிவிடுவேன்' என்று மிரட்டினார்'' என்று குறிப்பிட்டிருக்கிறார். இது குறித்து போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரித்துவருகின்றனர்.




Next Story