பொருளாதார நெருக்கடியை சமாளிக்க 300 பொருட்களின் இறக்குமதிக்கு இலங்கை அரசு தடை


பொருளாதார நெருக்கடியை சமாளிக்க 300 பொருட்களின் இறக்குமதிக்கு இலங்கை அரசு தடை
x
தினத்தந்தி 24 Aug 2022 7:24 AM GMT (Updated: 24 Aug 2022 8:46 AM GMT)

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 300 நுகர்வு பொருட்களுக்கு இலங்கை அரசு தடை விதித்துள்ளது.

கொழும்பு,

இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி காரணமாக அந்நாட்டு மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். உணவு, மருந்து, எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்தால் மக்கள் வீதிகளில் இறங்கி போராடத் துவங்கினர்.

இந்த தொடர் போராட்டம் மிகப்பெரும் புரட்சியாக வெடித்தது. போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகை, அதிபர் அலுவலகம், பிரதமர் அலுவலகம் உள்ளிட்ட அரசு கட்டிடங்களை சூறையாடியனர். இதனால் ராஜபக்சே குடும்பத்தினர் அரசாங்க பதவிகளை ராஜினாமா செய்தனர். அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே வெளி நாட்டுக்கு தப்பி சென்றார்.

இதனை தொடர்ந்து இலங்கையின் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே கடந்த மாதம் 21-ந் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டார். பொருளாதார நெருக்கடியை சமாளிக்க சர்வதேச நாணய நிதியத்தின் நிதியுதவியை இலங்கை அரசு நாடி வருகிறது. அதே சமயம் பல்வேறு பொருளாதார நடவடிக்கைகளையும் இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக 300 பொருட்களின் இறக்குமதிக்கு இலங்கை அரசு தடை விதித்துள்ளது. அதன்படி சாக்லேட், வாசனை திரவியங்கள், ஷாம்பூ உள்பட வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 300 நுகர்வு பொருட்களுக்கு இலங்கை அரசு தடை விதித்துள்ளது. அதே சமயம் ஆகஸ்ட் 23-ந்தேதிக்கு முன்பு கப்பலில் ஏற்றப்பட்டு செப்டம்பர் 14-ந்தேதிக்குள் இலங்கைக்கு வந்து சேரும் பொருட்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படும் என்று இலங்கை அரசு தெரிவித்துள்ளது.


Next Story