காஷ்மீர் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை ஏற்றுக் கொண்டுதான் ஆகவேண்டும்: கரண்சிங் கருத்து


காஷ்மீர் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு  தீர்ப்பை ஏற்றுக் கொண்டுதான் ஆகவேண்டும்: கரண்சிங் கருத்து
x
தினத்தந்தி 12 Dec 2023 6:13 AM GMT (Updated: 12 Dec 2023 6:25 AM GMT)

ஜம்மு காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செல்லும் என்ற சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு குறித்து காஷ்மீரை இந்தியாவுடன் இணைத்த மகாராஜா ஹரிசிங் மகன் கரண்சிங் கருத்து கூறியுள்ளார்.

புதுடெல்லி,

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது செல்லும் என்று சுப்ரீம் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதத்துக்குள் காஷ்மீர் மாநில சட்டசபை தேர்தலை நடத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டு இருக்கிறது. சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பு வருத்தத்தை கொடுப்பதாக குலாம் நபி ஆசாத், உமர் அப்துல்லா ஆகியோர் கருத்து தெரிவித்தனர்.

இந்த நிலையில், கோர்ட்டு தீர்ப்பு குறித்து காஷ்மீரை இந்தியாவுடன் இணைத்த மகாராஜா ஹரிசிங் மகனும் 1952-ம் ஆண்டு முதல் 1965-ம் ஆண்டு வரை 370-வது பிரிவின் கீழ் சிறப்பு அந்தஸ்து அடிப்படையில் ஜம்மு காஷ்மீர் கவர்னராக இருந்தவரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான கரண் சிங் கூறியதாவது:

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு ஜம்மு காஷ்மீர் மக்களில் ஒரு பகுதியினருக்கு மகிழ்ச்சியைத் தரவில்லை. இருந்தபோதும் அனைவரும் உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை ஏற்றுத்தான் ஆகவேண்டும். அதனை தவிர்த்துவிட முடியாது. தேவையில்லாமல் தலையை சுவற்றில் முட்டிக் கொண்டிருக்கவும் வேண்டாம். அடுத்த தேர்தலுக்கு தயாராவோம். அதை நோக்கி பயணிப்போம்" என்று கூறினார்.


Next Story