எல்லைப் பாதுகாப்பில் மாநில அரசுகளுக்கும் பங்கு உள்ளது - மத்திய மந்திரி அமித்ஷா


எல்லைப் பாதுகாப்பில் மாநில அரசுகளுக்கும் பங்கு உள்ளது - மத்திய மந்திரி அமித்ஷா
x

கொல்கத்தாவில் இன்று மத்திய மந்திரி அமித்ஷா தலைமையில் கிழக்கு மண்டல கவுன்சில் கூட்டம் நடைபெற்றது.

கொல்கத்தா,

மேற்கு வங்காளத்தில் 25 வது கிழக்கு மண்டல கவுன்சில் கூட்டம் மத்திய மந்திரி அமித்ஷா தலைமையில் இன்று நடைபெற்றது.

இதில் மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, ஜார்கண்ட் முதல்-மந்திரி ஹேமந்த் சோரன், பீகார் துணை முதல்-மந்திரி தேஜஸ்வி யாதவ் மற்றும் ஒடிசா மந்திரி பிரதீப் அமத் ஆகியோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில், சட்டவிரோத ஊடுருவல், எல்லை தாண்டிய கடத்தல், இந்தியா-வங்காளதேச எல்லை ஆகியவை குறித்தும், ஜார்கண்ட், ஒடிசா மற்றும் மேற்கு வங்காளத்தில் மாவோயிஸ்ட் நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்தியாவின் எல்லையை பாதுகாப்பதில் எல்லை பாதுகாப்பு படையுடன் மாநில அரசுகளுக்கும் பங்கு உள்ளதாக மத்திய மந்திரி அமித்ஷா சுட்டிகாட்டி உள்ளார்.

மேற்கு வங்காளத்திற்கு அண்டை மாநிலங்களில் இருந்து ஆயுதங்கள் கடத்தப்படுவதாகவும், இதனை தடுக்க ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் தேவை என்று இந்த கூட்டத்தில் அம்மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி வலியுறுத்தினார்.

இது குறித்து உள்துறை அமைச்சகம் கூறுகையில்,

நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள முதல்-மந்திரிகள் தங்கள் மாநிலங்களில் நடைபெறும் ஜி-20 மாநாடு தொடர்பான நிகழ்ச்சிகளின் போது, தங்கள் மாநிலங்களின் கலாச்சாரம், பன்முகத்தன்மை மற்றும் சுற்றுலாத் தலங்களை உலகுக்கு காட்ட வேண்டும் என்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வலியுறுத்தினார்.

நாட்டின் கிழக்கு பகுதியில் நக்சலைட்டுகளின் அச்சம் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டதாகவும், அவர்கள் மீதான ஆதிக்கத்தைத் தக்கவைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அமித்ஷா வலியுறுத்தினார். கிழக்கு மாநிலங்களில் நக்சலைட்டுகள் மீண்டும் தலைதூக்கக்கூடாது. மேலும், கிழக்கு மாநிலங்கள் நாட்டின் பிற பகுதிகளுக்கு இணையாக வளர்ச்சியடைய வேண்டும். என அமித்ஷா தெரிவித்துள்ளார்.

இன்று, நாட்டில் போதைப்பொருளுக்கு எதிரான போராட்டம் ஒரு முக்கியமான கட்டத்தில் உள்ளது. போதைப்பொருட்களுக்கு எதிரான பிரசாரத்தை தீவிரப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. போதைப்பொருளுக்கு எதிராக மாவட்ட அளவில் என்சிஓஆர்டி அமைப்பை உருவாக்கி, தொடர்ச்சியாக கூட்டங்களை நடத்துவதை உறுதி செய்யுமாறு அமித்ஷா வலியுறுத்தினார்.


Next Story