பூடானுக்கான இந்திய தூதராக சுதாகர் தலேலா நியமனம்


பூடானுக்கான இந்திய தூதராக சுதாகர் தலேலா நியமனம்
x

பூடானுக்கான இந்திய தூதராக சுதாகர் தலேலா மத்திய அரசால் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

புதுடெல்லி,



பூடான் நாட்டுக்கான இந்தியாவின் தூதராக இந்திய வெளியுறவு துறை அதிகாரி சுதாகர் தலேலாவை நியமனம் செய்து மத்திய வெளிவிவகார அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

இதற்கு முன் பூடானுக்கான இந்திய தூதராக ருசிரா கம்போஜ் என்பவர் இருந்து வந்துள்ளார். அவர் 1987ம் ஆண்டு இந்திய வெளியுறவு துறையில் சேர்ந்தவர். 2019ம் ஆண்டு பிப்ரவரியில் பூடானுக்கான இந்திய தூதராக அவர் நியமிக்கப்பட்டார்.

அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் உள்ள இந்திய தூதரகத்தின் துணை தலைவராக தலேலா, பதவியில் உள்ளார். கடந்த 1993ம் ஆண்டு இந்திய வெளியுறவு துறையில் பணியில் சேர்ந்த தலேலா சமீபத்தில் சிகாகோவில் உள்ள இந்திய தூதரகத்திலும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

அவர் பிரதமர் அலுவலகத்தின் இயக்குனராக பணியாற்றி உள்ளதுடன், தெற்காசிய அண்டை நாடுகள், சீனா மற்றும் இந்தோ-பசிபிக் பகுதியில் உள்ள பிற நாடுகள், வளைகுடா, மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளின் மீது கவனம் செலுத்தியுள்ளார்.

பூடான் மற்றும் நேபாளத்துடனான இந்தியாவின் நட்புறவை மேற்பார்வை செய்யும் இணை செயலாளராகவும் (வடக்கு) அவர் இருந்துள்ளார்.


Next Story