கோத்ரா ரெயில் எரிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவருக்கு ஜாமீன்: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு


கோத்ரா ரெயில் எரிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவருக்கு ஜாமீன்: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
x

கோப்புப்படம்

கோத்ரா ரெயில் எரிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவருக்கு ஜாமீன் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

புதுடெல்லி,

கடந்த 2002-ம் ஆண்டு குஜராத்தின் கோத்ராவில் சபர்மதி ரயில் எரிக்கப்பட்ட சம்பவத்தில் 58 பேர் கொல்லப்பட்டனர். பின்னர் இது குஜராத் கலவரத்திற்கு காரணமானது.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 11 பேருக்கு தூக்கு தண்டனையும், 20 பேருக்கு ஆயுள் தண்டனையும், 63 பேரை விடுவித்தும் விசாரணை நீதிமன்றம் 2011-ம் ஆண்டு தீர்ப்பு கூறியது. பின்னர் 11 பேருக்கான தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குஜராத் ஐகோர்ட்டு குறைத்தது. இது தொடர்பான மேல்முறையீட்டு மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளன.

இந்த நிலையில் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட பாரூக் என்பவர் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய். சந்திர சூட் தலைமையிலான அமர்வு விசாரித்தது. மனுதாரர் சார்பில் மூத்த வக்கீல் எஸ்.நாகமுத்து ஆஜராகி, 17 ஆண்டுகள் சிறையில் கழித்துவிட்டதால் ஜாமீன் வழங்க வேண்டும் என வாதிட்டார்.

இதற்கு குஜராத் அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆட்சேபித்தார்.

மனுதாரரின் வாதத்தை ஏற்ற சுப்ரீம் கோர்ட்டு அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.


Next Story