தேர்தல் பத்திர வழக்கு.. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்


தேர்தல் பத்திர வழக்கு.. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்
x

கார்ப்பரேட் நிறுவனங்கள் அரசியல் கட்சிகளுக்கு நிதி தரும்போது அதற்கு கைமாறு எதிர்பார்க்க வாய்ப்பு உள்ளது என நீதிபதிகள் தெரிவித்தனர்.

புதுடெல்லி:

அரசியல் கட்சிகள் பெருமளவு நிதிகளை வாங்கி குவிக்க வழிவகை செய்துள்ள தேர்தல் பத்திரம் செல்லாது என அறிவிக்கக்கோரி தொடரப்பட்ட பொதுநல வழக்குகளில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கி உள்ளது. தேர்தல் பத்திர முறை சட்டவிரோதமானது என்றும், தேர்தல் பத்திர திட்டத்தை ரத்து செய்வதாகவும் நீதிபதிகள் ஒருமித்த தீர்ப்பை வழங்கியிருக்கிறார்கள்.

தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்..

* தகவல்களை வெளிப்படையாக தெரிவிக்காத தேர்தல் பத்திரங்கள் சட்டவிரோதமானவை. தேர்தல் பத்திரங்கள் வழங்குவதை வங்கிகள் நிறுத்த வேண்டும்.

* கருப்பு பணத்தை கட்டுப்படுத்தும் நோக்கத்தை அடைய தேர்தல் பத்திரங்கள் தவிர வேறு வழிகள் உள்ளன.

* தேர்தல் பத்திரங்கள் மூலம் வழங்கப்பட்ட அனைத்து பங்களிப்பின் விவரங்களையும் தேர்தல் ஆணையத்திடம் மார்ச் 6-ம் தேதிக்குள் ஸ்டேட் வங்கி வழங்கவேண்டும்.

* ஸ்டேட் வங்கி பகிர்ந்து கொள்ளும் தகவல்களை தேர்தல் ஆணையம் அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மார்ச் 13ம் தேதிக்குள் வெளியிடவேண்டும்.

* கார்ப்பரேட் நிறுவனங்கள் அரசியல் கட்சிகளுக்கு நிதி தரும்போது அதற்கு கைமாறு எதிர்பார்க்க வாய்ப்பு உள்ளது. கார்ப்பரேட் நிறுவனங்கள் வரம்பற்ற பங்களிப்பை வழங்க அனுமதிப்பது தன்னிச்சையானது.

* தேர்தல் பத்திரம் தொடர்பான சட்டத்திருத்த மசோதாக்கள் ரத்து செய்யப்படுகின்றன. கம்பெனி சட்டத்திருத்த மசோதாவும் ரத்து செய்யப்படுகிறது.


Next Story