செந்தில்பாலாஜி வழக்கில் தமிழக டிஜிபி ஆஜராக சுப்ரீம் கோர்ட்டு சம்மன்


செந்தில்பாலாஜி வழக்கில் தமிழக டிஜிபி ஆஜராக சுப்ரீம் கோர்ட்டு சம்மன்
x
தினத்தந்தி 8 Aug 2023 6:26 AM GMT (Updated: 8 Aug 2023 7:25 AM GMT)

செந்தில்பாலாஜி தொடர்பான வழக்கில் தமிழக டிஜிபி ஆஜராக சுப்ரீம் கோர்ட்டு சம்மன் அனுப்பியுள்ளது.

புதுடெல்லி,

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அமலாக்கத்துறை கைது செய்தது சட்ட விரோதம் என செந்தில் பாலாஜி தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் நேற்று தள்ளுபடி செய்யப்பட்டன. மேலும் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரணை நடத்தலாம் எனவும் தெரிவித்தது.

இதையடுத்து, செந்தில் பாலாஜியை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை பரிசீலனை செய்த நீதிமன்றம், செந்தில் பாலாஜியை வரும் 12-ம் தேதி வரை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டது. அதன்படி இன்று 2-வது நாளாக செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், செந்தில்பாலாஜி மீதான குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்த வழக்கில் தமிழக டிஜிபி மற்றும் உள்துறை செயலர் நேரில் ஆஜராக சுப்ரீம் கோர்ட்டு சம்மன் அனுப்பியுள்ளது. எவ்வளவு கால அவகாசம் வேண்டும் என்பதை அவர்களே (டிஜிபி மற்றும் உள்துறை செயலர்) இந்த விஷயத்தில் நேரில் வந்து கேட்கட்டும் என்றும் 6 மாதம் அவகாசம் வழங்க முடியாது; குறைந்தபட்ச கால அவகாசம் மட்டுமே வழங்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். செந்தில் பாலாஜி வழக்கில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் இறுதி விசாரணையை நிறைவு செய்ய கால அவகாசம் கோரிய மனு மீது சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.


Next Story