கர்நாடகாவில் தமிழக தாய், 2 சிசு பலியான சம்பவம்... மருத்துவர்களை தண்டிக்க புதிய சட்டம்


கர்நாடகாவில் தமிழக தாய், 2 சிசு பலியான சம்பவம்... மருத்துவர்களை தண்டிக்க புதிய சட்டம்
x
தினத்தந்தி 5 Nov 2022 5:26 AM GMT (Updated: 5 Nov 2022 5:30 AM GMT)

கர்நாடகாவில் அரசு மருத்துவமனைகளில் முறைகேடாக நடந்து கொள்ளும் மருத்துவர்களை தண்டிக்க புதிய சட்டம் கொண்டு வரப்படும் என மந்திரி சுதாகர் கூறியுள்ளார்.



பெங்களூரு,


தமிழகத்தில் இருந்து கர்நாடகாவில் புலம்பெயர்ந்து சென்று வசித்து வந்த பெண், அரசு மருத்துவமனையில் சிகிச்சை மறுக்கப்பட்டதில், புதிதாக பிறந்த அவரது 2 குழந்தைகள் உள்பட 3 பேரும் உயிரிழந்த சோகம் ஏற்பட்டு உள்ளது. பெண்ணின் கணவர், 4 மாதங்களுக்கு முன் உயிரிழந்த நிலையில், 6 வயது சிறுமி தனித்து விடப்பட்டு உள்ளார்.

இந்த விவகாரம் பற்றி கர்நாடக சுகாதார மந்திரி கே. சுதாகர் கூறும்போது, சிறுமியின் பெயரில் அரசு சார்பில் ரூ.5 லட்சம் நிலையான வைப்பு தொகை செலுத்தப்படும். சிறுமியின் கல்வி செலவை அரசே ஏற்கும்.

சிறுமியை பெண்கள் பாதுகாப்பு மையத்தில் அனுமதித்து 18 வயது வரை இலவச கல்வி பெறுவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இதுபற்றி முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையுடன் பேசப்படும் என கூறியுள்ளார்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மாவட்ட அறுவை சிகிச்சை நிபுணர், மருத்துவர்கள் மற்றும் பிற பணியாளர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. இதுபற்றி 24 மணிநேரத்தில் பதிலளிக்கும்படியும் கேட்டு கொள்ளப்பட்டு உள்ளது.

இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்க கூடாது. இதுபோன்ற அவசரகாலங்களில், ஆவணங்களை கேட்டு மருத்துவமனைகள் துன்புறுத்த கூடாது. அவசர சிகிச்சை அளித்த பின்னர், ஆவணங்களை சேகரித்து கொள்ளலாம்.

அவசரகால சிகிச்சைகள் என 76 சேவைகள் குறிப்பிடப்பட்டு, அறிவுறுத்தல்களும் உள்ளன. இதுபோன்ற வழக்குகளை மறுக்கவோ அல்லது சிகிச்சையை காலதாமதப்படுத்துவதோ கூடாது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை முறை இல்லையெனில், மக்கள் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம். அந்த கட்டண தொகையை அரசு ஏற்கும் என அவர் குறிப்பிட்டார்.

இந்த சம்பவம் ஏற்று கொள்ள முடியாத ஒன்று. மனிததன்மைக்கு ஏற்பட்ட களங்கம் இது. அந்த பெண்ணுக்கும், உலகை பார்ப்பதற்கு முன்பே மறைந்து விட்ட அந்த இரு சிசுக்களுக்காகவும் உண்மையில் வருந்துகிறேன். அரசு மருத்துவமனைகளில் முறைகேடாக நடந்து கொள்ளும் மருத்துவர்களை தண்டிக்க புதிய சட்டம் கொண்டு வரப்படும்.

அவர்கள் உடனடியாக பணியில் இருந்து நீக்கம் செய்யப்படுவார்கள். இதுபற்றி முதல்-மந்திரியிடம் நான் பேசுவேன். தேவைப்பட்டால், அடுத்த சட்டசபை கூட்டத்தொடரில் இதற்கான சட்ட திருத்தம் கொண்டு வரப்படும் என அவர் கூறியுள்ளார்.

சம்பவம் முழு விவரம்

கர்நாடகாவில் துமகூரு மாவட்டம் டவுன் பாரதிநகர் அருகே ஆஞ்சநேயர் கோவில் பகுதியில் வசித்து வந்தவர் கஸ்தூரி (வயது 30). இவரது சொந்த ஊர் தமிழகத்தின் கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் ஆகும். கஸ்தூரியின் கணவர் கடந்த 4 மாதத்திற்கு முன்பு இறந்து விட்டார்.

கஸ்தூரிக்கு 6 வயதில் பெண் குழந்தை உள்ளது. இதற்கிடையில், நிறைமாத கர்ப்பிணியாக இருந்த கஸ்தூரி கடந்த 2-ந்தேதி பிரசவ வலியால் துடித்தார். உடனடியாக அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் கஸ்தூரியை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.

ஆனால் தாய் அட்டை, ஆதார் அட்டை இல்லாததால் கஸ்தூரிக்கு சிகிச்சை அளிக்க டாக்டர் உஷா மறுத்து விட்டார்.

இதன் காரணமாக நேற்று முன்தினம் கஸ்தூரிக்கு 2 ஆண் சிசுக்கள் பிறந்து இறந்ததுடன், ரத்த போக்கு அதிகமானதால் கஸ்தூரியும் பலியாகி இருந்தார். இந்த சம்பவம் துமகூரு மட்டுமின்றி மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இந்த நிலையில் இந்த விவகாரம் பற்றிய பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழகத்தின் கள்ளக்குறிச்சியை சேர்ந்த கஸ்தூரி முதலில் பெங்களூருவில் தனது கணவருடன் வசித்து வந்துள்ளார். தம்பதி 2 பேரும் கூலி வேலை செய்து வந்துள்ளனர். கடந்த 4 மாதத்திற்கு முன்பு கஸ்தூரியின் கணவர் தற்கொலை செய்து கொண்டார். அப்போது கஸ்தூரி கர்ப்பமாக இருந்தார்.

இதனையடுத்து, தனது 6 வயது மகளுடன் வேலைக்காக துமகூருக்கு வந்துள்ளார். அங்கு ஜெயம்மா என்பவரின் சிறிய வீட்டில் கஸ்தூரி தனது மகளுடன் வசித்து வந்தார். கூலி வேலைக்கும் அவர் சென்று வந்துள்ளார்.

கடந்த 2-ந்தேதி இரவு கஸ்தூரிக்கு பிரசவ வலி ஏற்பட்டதால், துமகூரு ஆஸ்பத்திரிக்கு அக்கம் பக்கத்தினர் அழைத்து சென்றுள்ளனர். அங்கு டாக்டர் உஷா சிகிச்சை அளிக்க மறுத்ததுடன், பெங்களூரு விக்டோரியா ஆஸ்பத்திரிக்கு செல்லும்படி கூறியுள்ளார்.

துமகூருவில் இருந்து பெங்களூருவுக்கு ஆம்புலன்சில் வருவதற்கு கஸ்தூரியிடம் பணம் இல்லை. இதன் காரணமாக வேறு வழியின்றி வீட்டுக்கு வந்துள்ளார். வீட்டில் வைத்து நேற்று முன்தினம் காலையில் அவருக்கு முதலில் ஆண் சிசு பிறந்துள்ளது. 2-வது சிசு பிறக்கும் போது கஸ்தூரிக்கு ரத்த போக்கு அதிகமாகி பலியானதுடன், அந்த ஆண் சிசுவும் உயிர் இழந்திருந்தது.

கஸ்தூரிக்கு வீட்டில் வைத்தே பிரசவம் நடந்ததால் அவரும், 2 சிசுக்களும் பலியான தகவல் வெளியாகி உள்ளது.




Next Story