சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. பட்டப்பகலில் ஆசிரியை கடத்தல்: வெளியான சிசிடிவி காட்சி


சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. பட்டப்பகலில் ஆசிரியை கடத்தல்: வெளியான சிசிடிவி காட்சி
x

அர்பிதாவை கடத்தியதில் உறவினரான ராமுவுக்கு சம்பந்தம் உள்ளது என்று அர்பிதாவின் தாயார் போலீசாரிடம் தெரிவித்தார்.

பெங்களூரு,

கர்நாடகாவின் ஹாசன் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிபவர் அர்பிதா (வயது 23). இன்று காலை பள்ளியின் அருகில் நின்றுகொண்டிருந்த அர்பிதாவை 3 நபர்கள் சொகுசு காரில் கடத்தி சென்றனர். இந்த காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். யார் மீதாவது சந்தேகம் இருக்கிறதா? என அர்பிதாவின் தாயாரிடம் விசாரித்தனர். அப்போது அர்பிதாவும் உறவினரான ராமுவும் 4 வருடங்களாக காதலித்து வருவதாகவும், இந்த கடத்தலுக்கும் ராமுவுக்கும் சம்பந்தம் இருப்பதாகவும் அர்பிதாவின் தாயார் குற்றம்சாட்டினார்.

அபிர்தாவை மீட்பதற்காக மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு ஒவ்வொரு கோணத்திலும் விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

"கனகதாச ஜெயந்தியை முன்னிட்டு கர்நாடகாவில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பள்ளி மூடப்பட்ட நாளில் அவர் ஏன் வீட்டை விட்டு வெளியேறி பள்ளிக்கு வந்தார்? ஏதாவது விழா இருந்ததா அல்லது வேறு ஏதாவது வேலைக்காக வெளியே சென்றாரா? என பல கோணங்களில் நாங்கள் விசாரித்து வருகிறோம்" என்று ஹாசன் போலீஸ் அதிகாரி முகமது சுஜீதா கூறினார்.

மேலும், சம்பவ இடத்திற்கு சென்று அப்பகுதி மக்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.


Next Story