திருப்பதி ஆனந்த நிலையம் கோபுரத்திற்கு தங்க முலாம் பூசும் பணி தற்காலிக நிறுத்தம் - தேவஸ்தானம் அறிவிப்பு


திருப்பதி ஆனந்த நிலையம் கோபுரத்திற்கு தங்க முலாம் பூசும் பணி தற்காலிக நிறுத்தம் - தேவஸ்தானம் அறிவிப்பு
x

கோபுரத்திற்கு தங்க முலாம் பூசும் பணி தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக தேவஸ்தானம் திருப்பதி அறிவித்துள்ளது.

திருப்பதி,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மூலவர் எழுந்தருளியிருக்கும் கோவில் கருவறையின் பெயர் ஆனந்த நிலையம் ஆகும். இந்த ஆனந்த நிலையம் மீது அமைக்கப்பட்டுள்ள தங்க கோபுரத்தின் பெயர் ஆனந்த நிலை விமானம் ஆகும்.

தொண்டைமான் சக்கரவர்த்தி கட்டியதாக கூறப்படும் ஆனந்த நிலைய விமானத்திற்கு கி.பி. 839-ம் ஆண்டு பல்லவ அரசரான விஜயதந்தி விக்ரம வர்மா முதலில் தங்க கவசம் அமைத்துள்ளார். அதன் பின்னர் 13-ம் நூற்றாண்டில் சதவர்ம சுந்தர பாண்டிய தேவன், 16-ம் நூற்றாண்டில் கிருஷ்ண தேவராயர் என இடைப்பட்ட காலத்தில் பல்வேறு மன்னர்கள் ஆனந்த நிலைய விமானத்திற்கு தங்க முலாம் பூசி திருப்பணி செய்துள்ளனர்.

இதையடுத்து திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் ஏற்பட்ட பின் 1958-ம் ஆண்டு ஆனந்த நிலைய விமானம் மீது இருந்த பொன் முலாம் பூசப்பட்ட தகடுகள் அகற்றப்பட்டு 12 டன் எடையுள்ள புதிய செம்பு தகடுகள் பொருத்தப்பட்டன. மேலும் 12 ஆயிரம் துலாம் எடையுள்ள தங்கத்தை பயன்படுத்தி 18 லட்சம் ரூபாய் செலவில் ஏழுமலையான் கோவில் கோபுரத்திற்கு பொன் முலாம் பூசப்பட்டது.

இதனை தொடர்ந்து ஆனந்த நிலையம் விமான கோபுரத்திற்கு இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தங்க முலாம் பூச தேவஸ்தான அறங்காவலர் குழு முடிவு செய்தது. இந்த பணிக்கு பக்தர்கள் திருப்பதி கோவில் உண்டியலில் செலுத்திய தங்கம் பயன்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் கோபுரத்திற்கு தங்க முலாம் பூசும் பணி தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக தேவஸ்தானம் திருப்பதி அறிவித்துள்ளது. திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சுவாமி கோவிலில், 2 ஆண்டுகளுக்கு முன்பு கோபுரங்களில் தங்க தகடுகள் பதிக்கும் பணி தொடங்கப்பட்ட நிலையில், அவை இன்னும் நிறைவு பெறவில்லை என்பதால், இந்த முறை சர்வதேச அளவில் ஒப்பந்தம் கோரப்பட்டு பணிகளை விரைந்து முடிக்க திட்டமிட்டுள்ளதாகவும், அடுத்த சில மாதங்களில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story