கடனை அடைக்க இன்டர்நெட்டில் விவரம் தேடிய கணவர்... விளைவு? மனைவி படுகொலை


கடனை அடைக்க இன்டர்நெட்டில் விவரம் தேடிய கணவர்... விளைவு? மனைவி படுகொலை
x

கடனை அடைக்க இன்டர்நெட்டில் விவரம் தேடிய கணவர் அதன் விளைவாக மனைவியை படுகொலை செய்துள்ள அதிர்ச்சி விவரம் வெளிவந்துள்ளது.



போபால்,



மத்திய பிரதேசத்தில் ராஜ்கார் மாவட்டத்தில் வசிப்பவர் பத்ரிபிரசாத் மீனா. இவருக்கு ஏகப்பட்ட கடன்கள் இருந்துள்ளன. அவற்றை எப்படி அடைப்பது என தெரியாமல் இணையதளத்தில் சென்று பல்வேறு வீடியோக்களை பார்த்து உள்ளார்.

இதன்பின்னர் ஒரு முடிவுக்கு வந்துள்ளார். இதன்படி, அவரது மனைவி பூஜாவை இன்சூரன்ஸ் (காப்பீடு) பெற செய்துள்ளார். இதன்பின்பு நடந்த விசயங்கள் போலீசாரின் விசாரணையில் வெளிவந்துள்ளன.

பத்ரிபிரசாத், தனது மனைவியை 4 பேர் சேர்ந்து கொன்று விட்டனர் என கூறி போலீசில் எப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளார். போலீசாரும் அவர்களை தேடி அலைந்துள்ளனர். ஆனால், அந்த 4 பேர் சம்பவம் நடந்தபோது அந்த பகுதியில் இல்லை என விசாரணையில் தெரிந்தது.

இதனை தொடர்ந்து அவர்களின் சந்தேகம் பூஜாவின் கணவர் மீது திரும்பியது. அவரை விசாரித்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன. பூஜாவை போபால் சாலையில் வைத்து, மனஜோட் பகுதியருகே இரவு 9 மணியளவில் அவரது கணவர் துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் பூஜா காயமடைந்து உள்ளார். பின்னர், அவர் சிகிச்சையின்போது உயிரிழந்து விட்டார்.

இதற்கு முன் அவர், தனது கடன்களை அடைக்க இணையதளத்தில் வீடியோக்களை தேடி பார்த்த பின்னரே, மனைவியை காப்பீடு செய்யும்படி வற்புறுத்தி உள்ளார். அதன்பின் அவரை கொலை செய்து விட்டு காப்பீடு பணம் பெற்று கொள்ளலாம் என்று முடிவு செய்துள்ளார்.

ஆனால், அவரது திட்டம் அரங்கேறுவதற்குள் போலீசாரின் விசாரணையில் சிக்கி கொண்டார். பத்ரிபிரசாத்துடன் தொடர்புடைய கூட்டாளி ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளார். குற்ற சம்பவத்தில் தொடர்புடைய மற்ற 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.


Next Story