புதுச்சேரி சட்டப்பேரவையில் ரூ.4,634 கோடிக்கு இடைக்கால பட்ஜெட் தாக்கல்


புதுச்சேரி சட்டப்பேரவையில் ரூ.4,634 கோடிக்கு இடைக்கால பட்ஜெட் தாக்கல்
x

புதுச்சேரி இடைக்கால பட்ஜெட்டை முதல்-மந்திரி ரங்கசாமி தாக்கல் செய்தார்

புதுச்சேரி,

புதுச்சேரியில் சட்டப்பேரவை இன்று கூடியது . சபாநாயகர் ஏம்பலம் செல்வம் குறள் வாசித்து சட்டப்பேரவை நிகழ்வுகளை தொடங்கினார்.முதல் நிகழ்வாக, மறைந்த முன்னாள் அமைச்சர் ப.கண்ணனுக்கு இரங்கல் தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து நடிகரும், தே.மு.தி.க. தலைவருமான மறைந்த விஜயகாந்த், விவசாய விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் மற்றும் மார்க்சிஸ்டு மூத்த தலைவர் சங்கரய்யா ஆகியோருக்கு இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்பட்டு, மறைந்த தலைவர்களுக்காக, சபை உறுப்பினர்கள் அனைவரும் 2 நிமிடம் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினர்.

.தொடர்ந்து அரசின் செலவினங்களுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதி பொறுப்பு வகிக்கும் முதல்-மந்திரி ரங்கசாமி தாக்கல் செய்தார்.ஏப்ரல் முதல் ஆகஸ்டு வரையிலான 5 மாத அரசு செலவினங்களுக்கு ரூ.4 ஆயிரத்து 634 கோடியே 29 லட்சத்து 85 ஆயிரத்துக்கான இடைக்கால பட்ஜெட்டை அவர் தாக்கல் செய்தார்.

இந்த பட்ஜெட்டுக்கு குரல் வாக்கெடுப்பு நடத்தி, அனுமதி வழங்கப்பட்டதாக சபாநாயகர் ஏம்பலம் செல்வம் அறிவித்தார்.இந்த நிலையில் முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்யாததை கண்டித்து எதிர்கட்சிகளான தி.மு.க., காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.காலை 9.45 மணிக்கு தொடங்கிய சட்டசபை கூட்டம் 10.45 மணிக்கு முடிவடைந்தது. இதையடுத்து சபையை காலவரையின்றி ஒத்திவைப்பதாக சபாநாயகர் ஏம்பலம் செல்வம் அறிவித்தார்.


Next Story