கழுத்தை நெரித்து ஆசிரியை கொலை; நாடகமாடிய காதல் கணவர் கைது


கழுத்தை நெரித்து ஆசிரியை கொலை; நாடகமாடிய காதல் கணவர் கைது
x
தினத்தந்தி 5 Dec 2022 6:45 PM GMT (Updated: 5 Dec 2022 6:45 PM GMT)

மது அருந்த பணம் கொடுக்க மறுத்ததால் கழுத்தை நெரித்து ஆசிரியையை கொலை செய்துவிட்டு நாடகமாடிய அவரது கணவரை போலீசார் கைது செய்தனர்.

சிக்கமகளூரு:

தகராறு

சித்ரதுர்கா டவுன் ஐ.டி.யு. காலனியை சேர்ந்தவர் கிரண்குமார். இவரும், அதேப்பகுதியை சேர்ந்த வினுதா (வயது 24) என்பவரும் காதலித்து கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டனர். வினுதா அந்தப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார். இந்த தம்பதிக்கு ஒரு வயதில் மகன் உள்ளான்.

இந்த நிலையில் கிரண்குமார் மது அருந்தும் பழக்கத்துக்கு அடிமையாகி இருந்ததாக தெரிகிறது. இதனால் அவர், தினமும் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்து மனைவி வினுதாவிடம் தகராறு செய்து வந்துள்ளார். மேலும் வினுதாவின் நடத்தையில் சந்தேகப்பட்டும் அவரை அடித்து உதைத்தும் வந்துள்ளார்.

கொலை

இந்த நிலையில் நேற்று முன்தினம் மது அருந்த கிரண்குமார், வினுதாவிடம் பணம் கேட்டுள்ளார். ஆனால் அவர் பணம் கொடுக்க மறுத்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த கிரண்குமார், வினுதாவின் கழுத்தை நெரித்துள்ளார். இதில் அவர் மூச்சுத்திணறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த கிரண்குமார், வினுதா தற்கொலை செய்துகொண்டது போல உடலை தூக்கில் தொங்கவிட்டுள்ளார்.

பின்னர் தனது மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டதாக கதறி அழுது நாடகமாடி உள்ளார். இதுபற்றிய தகவல் அறிந்ததும் சித்ரதுர்கா டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் போலீசார், வினுதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கணவர் கைது

இதற்கிடையே வினுதாவின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும் அவரது பெற்றோர் சித்ரதுர்கா டவுன் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார், கிரண்குமாரை பிடித்து விசாரித்தனர். அப்போது, வினுதாவை கொலை செய்து தற்கொலை நாடகமாடியதை கிரண்குமார் ஒப்புக் கொண்டார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story