மக்களவை நெறிமுறைக் குழு முன் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா ஆஜர்


மக்களவை நெறிமுறைக் குழு முன் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.  மஹுவா மொய்த்ரா ஆஜர்
x
தினத்தந்தி 2 Nov 2023 6:29 AM GMT (Updated: 2 Nov 2023 7:32 AM GMT)

மக்களவையில் கேள்வியெழுப்ப பணம் பெற்றதாக எழுந்த புகாரில் மஹுவா மொய்த்ரா ஆஜராகி விளக்கமளித்துள்ளார்.

புதுடெல்லி,

திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்பதற்காக தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தனியிடம் லஞ்சம் பெற்றதாக பாஜக எம்பி நிஷிகாந்த் துபே குற்றம்சாட்டியிருந்தார். இது தொடர்பாக விசாரணை குழு அமைக்க வேண்டும் என்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு துபே கடிதம் எழுதியிருந்தார்.

மக்களவைக்கு கேள்விகளை நேரடியாக பதிவிடுவதற்காக, நாடாளுமன்ற இணையதளத்தை பயன்படுத்தும் உள்நுழைவு அனுமதியை தர்ஷன் ஹிராநந்தனிக்கு மஹுவா மொய்த்ரா வழங்கியதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள இந்த புகார் மீது, மக்களவை நெறிமுறைக்குழு விசாரணை நடத்துகிறது.

அக்டோபர் 31ம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி மஹுவா மொய்த்ராவுக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால், நெறிமுறைக்குழு அதிகாரப்பூர்வமாக தனக்கு சம்மன் அனுப்புவதற்கு முன்பாகவே ஊடகங்களில் வெளியிட்டதை காரணம் காட்டி, வேறொரு நாளில் ஆஜராக அனுமதிக்கும்படி அவர் கேட்டுக்கொண்டார். இதனால் விசாரணை தேதி தள்ளி வைக்கப்பட்டது.

அதன்பின்னர் நவம்பர் 2ம் தேதி ஆஜராவதாக நெறிமுறைக்குழுவுக்கு மஹுவா மொய்த்ரா கடிதம் எழுதியிருந்தார் அதன்படி இன்று மக்களவை நெறிமுறைக் குழு முன் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார். அப்போது அவர் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.


Next Story