ஜனாதிபதியின் பெயரை அவையில் கூச்சல் போட்டு, அவமதித்த மத்திய மந்திரி இரானி; காங்கிரஸ் எம்.பி. குற்றச்சாட்டு


ஜனாதிபதியின் பெயரை அவையில் கூச்சல் போட்டு, அவமதித்த மத்திய மந்திரி இரானி; காங்கிரஸ் எம்.பி. குற்றச்சாட்டு
x

ஜனாதிபதியின் பெயரை அடைமொழியுடன் கூறாமல் அவமதிக்கும் வகையில் அவையில், மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி கூச்சல் போட்டு உள்ளார் என காங்கிரஸ் எம்.பி. குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளார்.



புதுடெல்லி,



நாட்டின் 15வது ஜனாதிபதியாக திரவுபதி முர்மு கடந்த 25ந்தேதி பதவியேற்று கொண்டார். அவருக்கு சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி. ரமணா பதவி பிரமாணம் செய்து வைத்த பின் திரவுபதி முர்மு ஆற்றிய உரையில், ஜனநாயகத்தின் சக்தி இதுதான். ஒரு ஏழை வீட்டில் பிறந்த பெண், இந்தியாவின் மூலைமுடுக்கான பகுதியில் பிறந்த ஒரு ஏழை வீட்டு குழந்தை, நாட்டின் அரசியலமைப்பின் மிக உயரிய பதவியை வகிக்க முடியும் என்பது நிரூபணம் ஆகி உள்ளது.

ஜனாதிபதியாக நான் தேர்வானது என்னுடைய சொந்த சாதனை அல்ல, இந்த சாதனை நம் நாட்டில் உள்ள ஒவ்வொரு ஏழையின் சாதனையாகவே பார்க்கப்படும். நான் ஒடிசா மாநிலத்தில் ஒரு சிறிய பழங்குடியின கிராமத்தில் பிறந்தவள். எனக்கு இந்நாட்டின் ஜனாதிபதியாகும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

ஒரு வார்டு கவுன்சிலர் நிலையில் இருந்து இப்போது ஜனாதிபதியாகும் வாய்ப்பு கிடைத்தது. இதுதான் நம் நாட்டின் பெருமை. ஜனநாயகத்தின் தாயாக இந்தியா விளங்குகிறது என கூறினார்.

இந்த நிலையில், ஜனாதிபதி திரவுபதி முர்மு பற்றி காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பேசிய பேச்சு சர்ச்சையை எழுப்பியது. இதுபற்றி அவர் பேசிய வீடியோ ஒன்றில், ஜனாதிபதி திரவுபதி முர்முவை, ராஷ்டிரபத்னி என அவர் கூறியது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனால், நாடாளுமன்றத்திற்கு வெளியே கடந்த வியாழ கிழமை திரண்ட பா.ஜ.க.வை சேர்ந்த ஆண் மற்றும் பெண் எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்காக காங்கிரஸ் கட்சி மன்னிப்பு கோர வேண்டும் என அவர்கள் கோஷங்களையும் எழுப்பினர். கைகளில் எதிர்ப்பு வாசகங்கள் அடங்கிய அட்டைகளையும் ஏந்தி இருந்தனர். இந்த போராட்டத்தில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனும் கலந்து கொண்டு கோஷம் எழுப்பினார்.

இதுபற்றி நாடாளுமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற கேள்விக்கே இடமில்லை. தவறுதலாக நான் ராஷ்டிரபத்னி என கூறிவிட்டேன். இதற்காக நீங்கள் இப்போது என்னை தூக்கிலிட வேண்டும் என விரும்பினால், செய்யுங்கள்... ஆளும் கட்சி உள்நோக்கத்துடன் மடுவை மலையாக்க முயற்சி செய்கிறது என கூறினார்.

இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், அவையில் மதிப்பிற்குரிய ஜனாதிபதி அவர்களின் பெயரை திருமதி ஸ்மிரிதி இரானி அவர்கள் உச்சரித்த விதம் முறையற்றது என சுட்டி காட்ட விரும்புகிறேன். மதிப்பிற்குரிய ஜனாதிபதியின் அந்தஸ்து மற்றும் பதவிக்கு இணக்கத்துடனும் அது இருக்கவில்லை. மதிப்பிற்குரிய ஜனாதிபதி அல்லது மேடம் அல்லது திருமதி ஆகிய அடைமொழிகளை கூறாமல் தொடர்ந்து திரவுபதி முர்மு என அவர் கூச்சலிட்டு கொண்டே இருந்துள்ளார்.

இது மதிப்பிற்குரிய ஜனாதிபதி அவர்களின் பதவியின் முக்கியத்துவம் மற்றும் மதிப்பு ஆகியவற்றை இழிவுபடுத்துகிறது என தெளிவாக தெரிகிறது. அதனால், அவையில் மதிப்பிற்குரிய ஜனாதிபதியை பற்றி திருமதி ஸ்மிரிதி இரானி பேசிய விசயங்கள், அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட வேண்டும் என வலியுறுத்துகிறேன் என தெரிவித்து உள்ளார்.

அதற்கு முன்பு, நாடாளுமன்ற மக்களவையில் பேசிய மத்திய மந்திரி இரானி, நாடாளுமன்றத்தில், இந்தியாவின் தெருக்களில், ஒவ்வொரு குடிமகனிடமும் காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டும்.

சோனியா காந்தி, நீங்கள் திரவுபதி முர்முவை அவமதிப்பு செய்ய அனுமதித்து உள்ளீர்கள். அரசியலமைப்பில் மிக உயர்ந்த பதவியில் உள்ள ஒரு பெண்ணை அவமதிப்பு செய்ததற்கு சோனியா ஜி ஒப்புதல் அளித்து உள்ளார். இந்த நாட்டின் மிக உயர்ந்த பதவிக்கு வரும் ஏழை பெண்ணை அவமதிப்பு செய்ய சோனியா ஜி ஒப்புதல் அளித்துள்ளார். ஒவ்வொரு இந்திய குடிமகனையும் அவமதிக்க அனுமதித்து இருக்கிறீர்கள் என அவையில் மத்திய மந்திரி இரானி பேசினார்.


Next Story