உ.பி.: கட்டாய மதமாற்ற முயற்சி; மருத்துவ மாணவி புகார் - தந்தை, மகன் கைது


உ.பி.: கட்டாய மதமாற்ற முயற்சி; மருத்துவ மாணவி புகார் - தந்தை, மகன் கைது
x
தினத்தந்தி 18 Feb 2023 7:55 AM GMT (Updated: 18 Feb 2023 8:03 AM GMT)

உத்தர பிரதேசத்தில் பெயரை மறைத்து, கட்டாய மதமாற்ற முயற்சி மற்றும் பலாத்காரத்தில் ஈடுபட்ட நபர் மீது மருத்துவ மாணவி பரபரப்பு புகார் அளித்து உள்ளார்.



நொய்டா,


உத்தர பிரதேசத்தின் கிரேட்டர் நொய்டா நகரில் தங்காவர் காவல் நிலையத்தில் மருத்துவ மாணவி ஒருவர் பரபரப்பு புகார் அளித்து உள்ளார். அந்த புகாரின்படி, மருத்துவ மாணவி ராஜஸ்தானின் கோட்டா மாவட்டத்தில் படித்து வந்து உள்ளார்.

அப்போது, சமூக ஊடகம் வழியே ஆதித்ய சர்மா என்ற பெயரில் மாணவியிடம் நபர் ஒருவர் நட்பு கொண்டுள்ளார். அவரது அறிவுறுத்தலின்பேரில், கிரேட்டர் நொய்டாவில் உள்ள மருத்துவ கல்லூரியில் மாணவி சேர்ந்து உள்ளார்.

அதன்பின்னரே, அவரது பெயர் ஆதித்ய சர்மா இல்லை என்பதும், அவரது பெயர் முகமது அக்லக் ஷேக் என்பதும் மாணவிக்கு தெரிய வந்துள்ளது. உண்மையான பெயரை மறைத்து, தன்னை திருமணம் செய்ய அந்நபர் முயற்சித்து உள்ளார் என மாணவி குற்றச்சாட்டாக தெரிவித்து உள்ளார்.

டெல்லி லட்சுமி நகரில் உள்ள தனது நண்பரின் இல்லத்திற்கு வரும்படி மாணவியை அந்நபர் அழைத்து உள்ளார். அதனையேற்று சென்ற மாணவியை வலுகட்டாயப்படுத்தி, உடல்ரீதியான உறவை வைத்து கொண்டார் என அக்லக்கிற்கு எதிராக குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

அந்த மாணவி புகாரில், தனிப்பட்ட அந்தரங்க புகைப்படங்களை முகமது அக்லக் எடுத்து வைத்து கொண்டு, வைரலாக்கி விடுவேன் என மிரட்டுகிறார் என்றும் குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

கடந்த ஜனவரி 27-ந்தேதி, அக்லக்கும் அவரது தந்தை முகமது மொயின் ஷேக் ஆகியோர் கல்லூரிக்கு வந்து மாணவியை கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்ய முயன்றுள்ளனர். இதற்கு மறுப்பு தெரிவித்த மாணவியை, அக்லக் பாலியல் துன்புறுத்தல் செய்து, தாக்கி உள்ளார் என மாணவி புகாரில் தெரிவித்து உள்ளார்.

இந்த வழக்கில் புகாரில் குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்ட தந்தை மற்றும் மகன் என இருவரும் கைது செய்யப்பட்டு உள்ளனர். இதுபற்றி கிரேட்டர் நொய்டா ஏ.டி.சி.பி. தினேஷ் குமார் சிங் கூறும்போது, பிரிவு 323, 504, 506, 376 ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்து, மதமாற்ற தடை சட்டத்தின் கீழ் இருவரையும் காவலில் எடுத்து விசாரித்து வருகிறோம் என கூறியுள்ளார்.


Next Story