மத்திய அரசு பணிகளுக்கான யு.பி.எஸ்.சி. தேர்வுகளுக்கு 'ஒருமுறை பதிவு' வசதி அறிமுகம்


மத்திய அரசு பணிகளுக்கான யு.பி.எஸ்.சி. தேர்வுகளுக்கு ஒருமுறை பதிவு வசதி அறிமுகம்
x

யு.பி.எஸ்.சி. இணையதளத்தில், தேர்வர்கள் தங்களைப் பற்றிய அடிப்படை தகவல்களை ஒரு முறை பதிவு செய்தால் போதும்.

புதுடெல்லி:

மத்திய அரசு பணிகளுக்கு மத்திய பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) அவ்வப்போது தேர்வுகள் நடத்துகிறது. ஒவ்வொரு தேர்வுக்கு விண்ணப்பிக்கும்போதும் தங்களை பற்றிய அடிப்படை தகவல்களை தேர்வர்கள் விண்ணப்பத்தில் நிரப்ப வேண்டி இருக்கிறது. இதனால் நேரம் வீணாகிறது. தவறு ஏற்படவும் வாய்ப்புள்ளது.

இதை தவிர்ப்பதற்காக, தேர்வர்கள் ஒரு முறை மட்டும் பதிவு செய்யும் வசதியை யு.பி.எஸ்.சி. நேற்று அறிமுகம் செய்தது. இதன்படி, யு.பி.எஸ்.சி. இணையதளத்தில், தேர்வர்கள் தங்களைப் பற்றிய அடிப்படை தகவல்களை ஒரு முறை பதிவு செய்தால் போதும்.

அந்த தகவல்கள், யு.பி.எஸ்.சி. சர்வரில் சேமிக்கப்படும். யு.பி.எஸ்.சி. அடுத்தடுத்து நடத்தும் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும்போது, மீண்டும் அந்த தகவல்களை நிரப்ப வேண்டியது இல்லை. சேமிக்கப்பட்ட தகவல்கள் அப்படியே வந்து விடும்.

இந்த இணையதளம் 24 மணி நேரமும் செயல்படும் என்று யு.பி.எஸ்.சி. அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

1 More update

Next Story