சென்னை - திருப்பதி இடையே வந்தே பாரத் ரெயில்: 7-ந்தேதி தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி


சென்னை - திருப்பதி இடையே வந்தே பாரத் ரெயில்:  7-ந்தேதி தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி
x

சென்ட்ரல்- திருப்பதி இடையேயான வந்தே பாரத் ரெயில் ஜோலார்பேட்டையில் நின்று செல்லும் வகையில் பயண திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

மத்திய அரசு அதிவேக ரயில் பயண வசதியை ஏற்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை இயக்கி வருகிறது. இந்த வந்தே பாரத் ரயில்கள் நாட்டின் மிக வேகமாகச் செல்லும் ரயில்களாக உள்ளன. இவை மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கும் திறன் கொண்டவையாக உள்ளன.

இந்தநிலையில், தமிழகத்தில் சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து மைசூரு, கோயம்புத்தூர் இடையே தலா ஒரு வந்தே பாரத் ரெயில் இயக்கப்படுகிறது.

சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து கோயம்புத்தூர் வரை செல்லும் வந்தே பாரத் ரெயில் சேவையை கடந்த ஏப்ரல் மாதம் பிரதமர் மோடி சென்னையில் தொடங்கி தொடங்கி வைத்தார். இந்த ரெயில் சென்னையில் இருந்து காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், திருப்பூர் வழியாக கோயம்புத்தூர் வரை இரு மார்க்கமாகவும் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த ரெயிலுக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு ஏற்பட்டுள்ளது. இதேபோல, சென்னை எழும்பூர் - திருநெல்வேலி இடையேயும், சென்னை சென்ட்ரல் - திருப்பதி இடையேயும் தலா ஒரு வந்தே பாரத் ரயிலை இயக்க கோரிக்கை வைக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் சென்னை சென்ட்ரல் -திருப்பதி இடையே வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட உள்ளது. இந்த வந்தே பாரத் ரெயில் வரும் 7-ந்தேதி காணொலி மூலம் பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்ட்ரல்- திருப்பதி இடையேயான வந்தே பாரத் ரெயில் ஜோலார்பேட்டையில் நின்று செல்லும் வகையில் பயண திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து நெல்லைக்கும் விரைவில் படுக்கை வசதியுடன் கூடிய புதிய வந்தே பாரத் ரெயில் இயக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

சென்னை சென்ட்ரல் - திருப்பதி இடையே அதிகபட்சமாக மணிக்கு130 கி.மீ. வேகத்தில் செல்ல ரெயில் பாதைகள் தயாராக உள்ளன.


Next Story