வீட்டின் அலமாரிக்கு பின்னால் ரகசிய அறைக்குள் பதுங்கி இருந்த பயங்கரவாதிகள்: அதிரவைக்கும் வீடியோ

பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி என்கவுண்டரில் பயங்கரவாதிகள் 6 பேர் கொல்லப்பட்டனர்.
ரகசிய அறைக்குள் பதுங்கி இருந்த பயங்கரவாதிகள்
Published on

ஜம்மு,

ஜம்மு-காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் ஹிஸ்புல் முஜாஹிதீன் அம்மைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, பாதுகாப்புப் படையினர் நேற்று முன் தினம் அங்கு தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.

அங்குள்ள ஒரு கிராமத்தில் உள்ள வீட்டில் பயங்கரவாதிகள் பதுங்கியிருந்ததைக் கண்டறிந்தனர். பாதுகாப்புப் படையினரைப் பார்த்ததும் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். பதிலடியாக பாதுகாப்புப் படையினரும் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இரு தரப்பினருக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.

இதில் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் காயம் அடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதேபோல, மற்றொரு பகுதியில் நடந்த என்கவுண்டரிலும் பாதுகாப்புப் படை வீரர் உயிரிழந்தார். இந்த என்கவுண்டரில் பயங்கரவாதிகள் தரப்பில் 4 பேர் கொல்லப்பட்டனர். தொடர்ந்து துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வந்த நிலையில் என்கவுண்டரில் மேலும் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்த நிலையில் பயங்கரவாதிகள் இருந்த வீட்டில் ராணுவத்தினர் நடத்திய அதிரடி சோதனையில் அவர்கள் வீட்டின் துணி வைக்கும் அலமாரிக்குப் பின்னால் சுவரில் ரகசிய பதுங்கு குழி அமைத்து அதில் அவர்கள் பதுங்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான வீடியோ தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com