'பாஜக அமைத்த சாலையாக இருந்திருந்தால்' - யானை நடந்து செல்லும் வீடியோ வெளியிட்டு அகிலேஷ் கிண்டல்

தனது ஆட்சியில் அமைக்கப்பட்ட நெடுஞ்சாலையில் யானை நடந்து செல்லும் வீடியோவை வெளியிட்ட அகிலேஷ் பாஜகவை கிண்டல் செய்துள்ளார்.
'பாஜக அமைத்த சாலையாக இருந்திருந்தால்' - யானை நடந்து செல்லும் வீடியோ வெளியிட்டு அகிலேஷ் கிண்டல்
Published on

லக்னோ,

உத்தரபிரதேசத்தின் இடாவாஹ் மாவட்டத்தையும் சித்திரகொட் மாவட்டத்தையும் இணைக்கும் வகையிலான 4 வழி நெடுஞ்சாலையை கடந்த 16-ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைத்தார். 296 கிலோமீட்டர் நீளம் கொண்ட இந்த 4 வழி நெடுஞ்சாலை அம்மாநிலத்தின் 7 மாவட்டங்களை கடந்து செல்கிறது. இந்த சாலைக்கு பண்டெல்காண்ட் எக்ஸ்பிரஸ் சாலை என பெயரிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில், உத்தரபிரதேசத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த கனமழை காரணமாக பிரதமர் மோடியால் புதிதாக திறக்கப்பட்ட பண்டெல்காண்ட் எக்ஸ்பிரஸ் சாலை சேதமடைந்தது. திறக்கப்பட்ட சில நாட்களிலேயே எக்ஸ்பிரஸ் சாலை மழையால் சேதமடைந்த நிகழ்வு சாலையில் தரம் குறித்த பல்வேறு கேள்விகளை எழுப்பியது. மேலும், இந்த விவகாரத்தை எதிர்க்கட்சிகளும் ஆளும் பாஜக மீது கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன.

இந்நிலையில், தனது ஆட்சி காலத்தில் அமைக்கப்பட்ட சாலையில் யானை செல்லும் வீடியோவை பதிவிட்டு சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் ஆளும் பாஜகவை கிண்டல் செய்துள்ளார்.

இது தொடர்பாக, அகிலேஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் தனது ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட ஆக்ரா - லக்னோ எக்ஸ்பிரஸ் சாலையில் யானை செல்லும் வீடியோவை அவர் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவுடன் அவர் வெளியிட்டுள்ள பதிவில், கட்டுப்பாடுகள் இருந்தபோதும் சமாஜ்வாதி கட்சியால் வலிமையாக கட்டப்பட்ட ஆக்ரா - லக்னோ எக்ஸ்பிரஸ் யானை நடந்து செல்கிறது. இதுவே யானை தவறுதலாக பண்டெல்காண்ட் எக்ஸ்பிரஸ் சாலையில் (பாஜக ஆட்சியில் அமைக்கப்பட்டது) நடந்து சென்றிருந்தால் எடை தாங்காமல் சாலை இடிந்து விழுந்திருக்கும். யானைக்கும் காயம் ஏற்பட்டிருக்கும். எக்ஸ்பிரஸ் சாலைக்கான பாதுகாவலர்கள் எங்கே?' என்றார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com