சிக்கமகளூருவில் நாளை விஜய சங்கல்ப யாத்திரை


சிக்கமகளூருவில் நாளை விஜய சங்கல்ப யாத்திரை
x
தினத்தந்தி 15 March 2023 5:15 AM GMT (Updated: 15 March 2023 5:16 AM GMT)

சிக்கமகளூருவில் நாளை விஜய சங்கல்ப யாத்திரையை எடியூரப்பா தொடங்கி வைக்கிறார்

சிக்கமகளூரு-

சிக்கமகளூருவில் நாளை பா.ஜனதாவின் விஜயசங்கல்ப யாத்திரை நடைபெறும் என்று மாவட்ட தலைவர் கல்முருடப்பா கூறியுள்ளார்.

பா.ஜனதா யாத்திரை

கர்நாடகத்தில் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. பா.ஜனதா, காங்கிரஸ், ஜனதா தளம் (எஸ்) கட்சிகள், தொடர்ந்து ேதர்தல் பிரசாரம் செய்து வருகின்றன. இதில் பா.ஜனதா கட்சியினர் விஜய சங்கல்ப யாத்திரை என்ற பெயரில் பிரசாரம் செய்து வருகின்றனர். இந்த பிரசாரம் மாவட்ட வாரியாக நடந்து வருகிறது. இதில் மாநில முதல்-மந்திரி உள்பட பல தலைவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சிக்கமகளூருவில் நாளை (வியாழக்கிழமை) பா.ஜனதாவின் விஜய சங்கல்ப யாத்திரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

16-ந் தேதி நடைபெறும்

இது குறித்து நிருபர்களுக்கு போட்டியளித்த மாவட்ட தலைவர் கல்முருடப்பா கூறியதாவது:-சிக்கமகளூரு மாவட்டத்தில் நாளை பா.ஜனதாவின் விஜய சங்கல்ப யாத்திரை நடக்க இருக்கிறது. சிருங்கேரியில் நடைபெறும் இந்த யாத்திரையை முன்னாள் முதல்-மந்திரி எடியூப்பா தொடங்கி வைக்கிறார். முன்னதாக இந்த யாத்திரையொட்டி, மூடிகெரே பகுதியில் பிரமாண்ட ஊர்வலம் நடைபெறுகிறது. பின்னர் அன்றைய தினம் மாலை பிரமாண்ட பொதுகூட்டம் நடத்தப்படுகிறது.

இதற்காக சிக்கமகளூருவில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் மேடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த பொது கூட்டத்தில் எடியூரப்பா கலந்து கொண்டு தேர்தல் பிரசாரம் செய்ய இருக்கிறார். இந்த யாத்திரையில் ஏராளமான பா.ஜனதா தொண்டர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story