விசாரணைக்கு ஆஜராகாத ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஒரு வாரம் காலஅவகாசம் வழங்க கோரிக்கை


விசாரணைக்கு ஆஜராகாத ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஒரு வாரம் காலஅவகாசம் வழங்க கோரிக்கை
x

பெங்களூருவில் வாக்காளர்கள் தகவல்களை திருடிய வழக்கில் விசாரணைக்கு ஆஜராகாத ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஒரு வாரம் காலஅவகாசம் வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

பெங்களூரு:

பெங்களூருவில் வாக்காளர்களின் தகவல்களை திருடிய விவகாரம் குறித்து அல்சூர்கேட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் சிலுமே நிறுவனத்தின் தலைவர் ரவிக்குமார் உள்பட 15 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பெங்களூரு மாவட்ட கலெக்டராக இருந்த சீனிவாஸ், மற்றொரு ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, கடந்த மாதம் (நவம்பர்) 26-ந் தேதி 2 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 2 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளிடமும் ஏற்கனவே அல்சூர்கேட் போலீசார் விசாரித்து தகவல்களை பெற்றிருந்தனர்.

சிலுமே நிறுவன தலைவர் ரவிக்குமார் வாக்காளர்களின் தகவல்களை திருடியது குறித்து சில தகவல்களை போலீசாரிடம் தெரிவித்திருந்தார். அதுபற்றி சீனிவாஸ், மற்றொரு ஐ.ஏ.எஸ். அதிகாரியிடம் விசாரிக்க போலீசார் முடிவு செய்தனர். விசாரணைக்கு ஆஜராகும்படி 2 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கும் சம்மனும் வழங்கப்பட்டு இருந்தது. அதன்படி, 2 பேரும் நேற்று விசாரணைக்கு ஆஜராவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் அவர்கள் விசாரணைக்கு ஆஜராகவில்லை. விசாரணைக்கு ஆஜராக ஒரு வாரம் காலஅவகாசம் வழங்கும்படி 2 அதிகாரிகளும் அனுமதி கேட்டு இருப்பதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story