ரூ.10 லட்சம் கோடியை தள்ளுபடி செய்வதே இலவச பரிசு: கெஜ்ரிவால் சாடல்


ரூ.10 லட்சம் கோடியை தள்ளுபடி செய்வதே இலவச பரிசு:  கெஜ்ரிவால் சாடல்
x

இலவச கல்வி, சுகாதார சேவை வழங்குவது எந்தவொரு அரசின் கடமையாகும் என டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

புதுடெல்லி,



அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசாரத்தின்போது இலவச வாக்குறுதிகளை அளிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இதற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் ஆம் ஆத்மி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

இதற்கு முன் டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசும்போது, அனைத்து அரசாங்கங்களும், ஒவ்வொரு குழந்தைக்கும் இலவச கல்வி, தனிநபருக்கு இலவச சிகிச்சை, குடும்பத்துக்கு 300 யூனிட் இலவச மின்சாரம், வேலை வாய்ப்பின்மைக்கு அலவன்ஸ் வழங்க நடடிவக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

தொடர்ந்து அவர் பேசும்போது, நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக, ஏழை, எளிய மக்கள் மற்றும் நடுத்தர மக்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் வழங்கும் வசதிகள் நிறுத்தப்பட வேண்டும். இதனால், அரசுக்கு இழப்புகள் ஏற்படுகின்றன என்றதொரு சூழல் உருவாக்கப்படுகிறது.

சிலர் அதனை இலவசம் என்றும் சிலர் அதனை இலவச இனிப்பு என்றும் கூறுகின்றனர். இதுபோன்ற வெவ்வேறு வார்த்தைகளை பயன்படுத்தி, அரசுக்கு இழப்புகள் ஏற்படுகின்றன என்பது போன்ற ஒரு சூழல் ஒட்டு மொத்த நாடு முழுவதும் ஏற்படுத்தப்படுகிறது.

இதன்படி, நாடு முழுவதும் குழந்தைகளுக்கு அளிக்கப்பட்டு வரும் இலவச கல்வி நிறுத்தப்பட வேண்டும் என்ற சூழல் உருவாக்கப்பட்டு உள்ளது. சுதந்திர தின கொண்டாட்டத்தின்போது இதுபோன்ற விசயங்களை நாடு கேட்கும்போது அது பெரும் வேதனையை உண்டு பண்ணுகிறது.

இதுபோன்ற கல்வி நடைமுறை, இந்த 75 ஆண்டுகளில் ஏற்பட்டிருக்க வேண்டும். நாடு முழுமைக்கும் நல்ல, தரமுள்ள, இலவச கல்வி அவர்களுக்கு கிடைத்திருக்க வேண்டும். நாங்கள் அந்த சூழலை உருவாக்கி வருகிறோம். இதனால், அரசுக்கு இழப்பு ஏற்படுகிறது என்றபோதிலும் அதில் மோசம் ஒன்றும் இல்லை என கூறியுள்ளார்.

உலகில் 39 பணக்கார நாடுகளில் இலவச, தரமுள்ள கல்வி வழங்கப்படுகிறது. அவற்றில் 27 நாடுகளில் 12-வது வகுப்பு வரையும், 12 நாடுகள் 8-வது வகுப்பு வரையும் இலவச கல்வி வழங்குகின்றன. இதனாலேயே, இலவச, தரமுள்ள கல்வியை தங்களது குழந்தைகளுக்கு வழங்கியதனாலேயே அந்நாடுகள் பணக்கார நாடுகளாகி உள்ளன.

ஆனால், நம்முடைய நாட்டிலோ குழந்தைகளுக்கு இலவச கல்வி வழங்க கூடாது என்ற சூழல் உருவாகிறது. அதற்கேற்ப நமது குழந்தைகளை தயார்படுத்தி வருகிறோம் என சாடியுள்ளார்.

இதேபோன்று, உலகில் 16 நாடுகளில் வேலை வாய்ப்பின்மைக்கு அலவன்ஸ் வழங்கப்படுகிறது. அமெரிக்கா, கனடா, ஆஸ்திரியா, பெல்ஜியம், டென்மார்க், பிரான்ஸ், பின்லாந்து மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் தங்களுடைய நாட்டில் வேலை வாய்ப்பின்றி உள்ளவர்களுக்கு அலவன்ஸ் வழங்குகின்றன. அவர்கள் அதனை இலவச பரிசு என்று கூறுவதில்லை. இலவச இனிப்பு என்ற பேச்சுகளும் இல்லை என கெஜ்ரிவால் அதிரடியாக பேசியுள்ளார்.

அவர் தொடர்ந்து கூறும்போது, மந்திரிகளுக்கு இலவச மின்சாரம் வழங்குவது நியாயப்படுத்தப்படும்போது, பொது மக்களுக்கு ஏன் அதனை வழங்க கூடாது என கெஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார். இலவச மின்சாரம், இலவச குடிநீர் வழங்குவதில் என்ன தவறு? ஆம் ஆத்மிக்கு (பொது நபர்) இலவச மின்சாரம் வழங்கினால் அது குற்றம். ஆனால், மந்திரிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கினால் அது சரி.

இந்த மனிதர்கள் ரூ.10 லட்சம் கோடியை தங்களது நண்பர்களுக்கு தள்ளுபடி செய்கின்றனர். அதுபோன்ற நபர்களை துரோகிகள் என அழைக்க வேண்டும். அவர்களுக்கு எதிராக விசாரணை நடத்தப்பட வேண்டும். கார்ப்பரேட் கடன்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. ஆளும் அரசின் நண்பர்கள் உண்மையில் இலவசங்களை அனுபவித்து வருகின்றனர். இதுபற்றி ஒருவரும் பேசுவது கிடையாது என்று அவர் பேசியுள்ளது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.


Next Story