நீரவ் மோடி நாடு கடத்தப்படுவதற்கு எதிரான மேல்முறையீட்டு மனு தள்ளுபடி - இந்தியா வரவேற்பு


நீரவ் மோடி நாடு கடத்தப்படுவதற்கு எதிரான மேல்முறையீட்டு மனு தள்ளுபடி - இந்தியா வரவேற்பு
x

நீரவ் மோடி நாடு கடத்தப்படுவதற்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை லண்டன் ஐகோர்ட்டு தள்ளுபடி செய்ததை வரவேற்பதாக வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம்பாக்சி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

பஞ்சாப் நேஷனல் வங்கியில் பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்த வைர வியாபாரி நிரவ் மோடி, இங்கிலாந்துக்கு தப்பிச் சென்றார். சி.பி.ஐ. அளித்த புகாரின் பேரில் அங்கு கைது செய்யப்பட்டு 3 ஆண்டுகளாக லண்டன் வேண்ட்ஸ்வெர்த் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அவரை இந்தியாவுக்கு அழைத்துவரும் முயற்சியில் சி.பி.ஐ. அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை லண்டன் ஐகோர்ட்டில் நடைபெற்று வருகிறது. அதில் நிரவ் மோடி இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டால் அவர் தற்கொலை செய்துகொள்ளக்கூடிய அபாயம் குறித்து விசாரிக்கப்பட்டது. அப்போது, சிறையில் நிரவ் மோடியிடம் நேரடியாக ஆய்வு செய்த 2 உளவியல் நிபுணர்கள், அவர் மனஅழுத்தத்துடனும், தற்கொலை எண்ணத்துடனும் இருப்பதாக தெரிவித்தனர்.

அதேநேரம் இந்தியாவில் நிரவ் மோடிக்கான பாதுகாப்பு குறித்து, இந்திய அதிகாரிகள் சார்பில் ஆஜரான வக்கீல் உறுதியளித்தார். நிரவ் மோடி இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டால் அவரது தனிப்பட்ட நலனை காப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட வேண்டும் என்று அவரது வக்கீல் வாதிட்டார்.

இதனையடுத்து, நீரவ் மோடி நாடு கடத்தப்படுவதற்கு எதிராக செய்த மேல்முறையீட்டு மனுவை இங்கிலாந்து கோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும் அவர் மனநிலை காரணமாக தற்கொலை செய்து கொள்ளும் அபாயம் இருப்பதைக் காரணமாகக் காட்டி, இந்தியாவில் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளையும் பண மோசடி வழக்குகளையும் எதிர்கொள்வதிலிருந்து தப்பிப்பது நியாயமாகாது என்றும் லண்டன் ஐகோர்ட்டு தீர்ப்பளித்தது.

இந்த நிலையில், நீரவ் மோடி நாடு கடத்தப்படுவதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை லண்டன் ஐகோர்ட்டு தள்ளுபடி செய்ததற்கு இந்தியா வரவேற்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தெரிவிக்கையில், நீரவ் மோடியை நாடு கடத்துவதற்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த இங்கிலாந்து உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறோம்.

நீரவ் மோடி மற்றும் பிற பொருளாதார குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தப்படுவதற்கான முயற்சிகளை நாங்கள் தொடர்வோம். பொருளாதார மோசடியில் ஈடுபட்டு தப்பியோடியவர்களை நாடு கடத்தும் நடவடிக்கையை இந்தியா தீவிரமாக மேற்கொண்டு வருகிறது, இதனால் அவர்கள் சட்டப்பூர்வ நடவடிக்கைகளை எதிர்கொள்கின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Next Story