குஜராத்தில் காங்கிரஸ் தோல்விக்கு காரணம் என்ன?; வீரப்பமொய்லி விளக்கம்


குஜராத்தில் காங்கிரஸ் தோல்விக்கு காரணம் என்ன?; வீரப்பமொய்லி விளக்கம்
x
தினத்தந்தி 11 Dec 2022 6:45 PM GMT (Updated: 11 Dec 2022 6:46 PM GMT)

குஜராத்தில் காங்கிரஸ் தோல்விக்கு காரணம் என்ன? என்பதற்கு வீரப்பமொய்லி விளக்கம் அளித்துள்ளார்.

பெங்களூரு:

முன்னாள் மத்திய மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவருமான வீரப்பமொய்லி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கட்சிக்கு முன்பு வெற்றியை தேடி தந்தவர்களை கட்டாயம் மதிக்க வேண்டும். இமாசலபிரதேசத்தில் மறைந்த முன்னாள் முதல்-மந்திரி வீரபத்ரசிங்கின் மனைவிக்கு கட்சியின் தலைவர் பதவி வழங்கப்பட்டது. இந்த முயற்சி அங்கு வெற்றி பெற்றுள்ளது. அங்கு 40 இடங்களில் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சியை பிடித்துள்ளது. சோதனையான காலக்கட்டங்களில் கட்சியை வெற்றிகரமாக வழிநடத்தியவர்களுக்கு உரிய மரியாதை வழங்க வேண்டும்.

குஜராத்தில் காங்கிரஸ் கட்சிக்கு படுதோல்வி ஏற்பட்டுள்ளது. அங்குள்ள மூத்த தலைவர்களுக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கவில்லை. அவர்களை புறக்கணித்ததால் கட்சி தோல்வி அடைந்துள்ளது. குஜராத் தோல்வியில் இருந்து காங்கிரஸ் பாடம் கற்க வேண்டியுள்ளது. அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர்கள், மாநிலங்களின் மேலிட பொறுப்பாளர்கள் மற்றும் மாநில தலைவர்கள் மீது அதிக அழுத்தத்தை ஏற்படுத்த கூடாது.

கட்சிக்கு நேர்மையாக, விசுவாசமாக உழைத்தவர்களுக்கு உரிய பதவி வழங்க வேண்டும். 2017-ம் ஆண்டு நடைபெற்ற குஜராத் சட்டசபை தேர்தலில் 77 இடங்களில் வெற்றி பெற்று நல்ல ஆதரவை காங்கிரஸ் பெற்றது. ஆனால் அதன் பிறகு உள்ளூர் தலைவர்களுக்கு உரிய பதவி வழங்கவில்லை. திறமையான தலைவர்களை அடையாளம் காணவில்லை.

இவ்வாறு வீரப்பமொய்லி கூறினார்.


Next Story