ரோவரின் சக்கரத்தில் இருந்த தேசிய சின்னம் நிலவில் பதியாததற்கான காரணம் என்ன? - இஸ்ரோ தலைவர் விளக்கம்


ரோவரின் சக்கரத்தில் இருந்த தேசிய சின்னம் நிலவில் பதியாததற்கான காரணம் என்ன? - இஸ்ரோ தலைவர் விளக்கம்
x

நிலவில் உறக்கத்தில் உள்ள விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவரில் இருந்து சிக்னல் பெறும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது

பெங்களூரு,

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக கடந்த ஜூலை மாதம் 14-ந்தேதி எல்.வி.எம்.3 எம்4 ராக்கெட் மூலம் சந்திரயான்-3 விண்கலம் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது. புவிவட்டப்பாதை, நிலவு வட்டப்பாதையை கடந்து, கடந்த மாதம் 23-ந் தேதி மாலை 6.04 மணி அளவில் விண்கலத்தில் இருந்த விக்ரம் லேண்டர் 40 நாட்கள் வெற்றி பயணத்தை முடித்து கொண்டு நிலவில் வெற்றிகரமாக மென்மையாக தரை இறங்கி ஆய்வுப்பணியில் ஈடுபட்டது.

அதன் மூலம் கிடைத்த பல்வேறு தரவுகள் மற்றும் புகைப்படங்களை எடுத்து பெங்களூருவில் உள்ள தரை கட்டுப்பாட்டு மையத்திற்கு அனுப்பி வைத்தது. அங்கு ஒரு நிலவு நாள் முடிவடைந்து இரவு தொடங்கியபோது இருள் சூழ்ந்த நிலவின் தென்துருவத்தில் சிவசக்தி புள்ளியில் பிரக்யான் ரோவர் மற்றும் விக்ரம் லேண்டர் ஆகியவை 14 நாட்கள் உறக்க நிலையில் வைக்கப்பட்டன.

அப்போது, நிலவின் சுற்றுச்சூழல் சுமார் 200 டிகிரி உறைபனி தட்பவெப்பநிலையால் சூழப்பட்டு இருந்தது. இத்தகைய கடுமையான காலநிலையில் தொழில்நுட்ப உபகரணங்கள் வேலை செய்வது சாத்தியம் இல்லை. இருந்தாலும் அவற்றை மீண்டும் 14 நாட்களுக்கு பிறகு அதாவது கடந்த 22-ந்தேதி நிலவில் உறக்கத்தில் உள்ள விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் மீது ஒரு நிலவு நாள் அதாவது 14 நாட்கள் முடிந்து தற்போது சூரிய ஒளி பட தொடங்கி உள்ளது.

இதனால் திட்டமிட்டபடி கடந்த 22-ந்தேதி மீண்டும் அதனை செயல்பட வைக்கும் முயற்சிகள் நடைபெற்றது. இந்த நிகழ்வை அனைவரும் ஆர்வமாக எதிர்பார்த்தனர். ஆனால், விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவரில் இருந்து எவ்வித சிக்னலும் பெற முடியவில்லை. சிக்னல் பெறும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது

இது தொடர்பாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறுகையில்,

லேண்டர், ரோவரிடம் இருந்து இதுவரை எந்த தொடர்பும் இல்லை. ஆனால் அது வராது என்று என்னால் கூற முடியாது. முழு சந்திர நாள் வரையும் (14 பூமி நாட்கள்) நாம் காத்திருக்க வேண்டும். ஏனெனில் அந்த காலம் முழுவதும் சூரிய ஒளி தொடர்ந்து இருக்கும், அதாவது வெப்பநிலை மட்டுமே உயரும்.

வெப்பநிலை அதிகரிக்கும் வரை, உள்ளே உள்ள அமைப்புகள் வெப்பமடைவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே அமைப்புகள் 14 வது நாளில் கூட எழுந்திருக்கலாம். அது எப்போது நடக்கும் என்று கணிக்க வழி இல்லை, ஆனால் அது காலப்போக்கில் மாறக்கூடும் என்றார்.

நிலவின் தென் துருவத்தில் ஆய்வில் ஈடுபட்ட ரோவரின் பின்புற சக்கரங்களில் இந்திய தேசிய சின்னம் மற்றும் சந்திர மண்ணில் இஸ்ரோ லோகோ பொறிக்கப்பட்டுள்ளது. அந்த முத்திரைகள் ரோவர் ஆய்வில் தெளிவாக விழவில்லை. இதற்கு மண்ணின் தன்மையே காரணம். நிலவின் மண் தூசிகளாக அல்லாமல் மிக இறுக்கமாக இருந்துள்ளது. இது ஒரு நல்ல அறிகுறி என்கின்றனர் விஞ்ஞானிகள்.

தென் துருவப் பகுதியில் உள்ள நிலவு மண்ணின் பண்புகள் பற்றிய புதிய புரிதல். தென் துருவப் பகுதியில் உள்ள மண்ணைப் பற்றிய புதிய தகவல்கள் என்பது பல எதிர்கால பயணங்களுக்கு இலக்காக உள்ளது. நிலவில் தண்ணீரைக் கண்டுபிடிப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளது. இது தொடர்பாக ஆய்வு செய்யப்படும்.

இவ்வாறு சோம்நாத் கூறினார்.


Next Story