சலுகைகள் எதுவும் இருக்குமா..? - இன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல்


சலுகைகள் எதுவும் இருக்குமா..? - இன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல்
x

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாரமன் தாக்கல் செய்யும் 6-வது பட்ஜெட் இது ஆகும்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இது இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால், இரு அவை உறுப்பினர்களின் கூட்டுக்கூடத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார்.

இந்தநிலையில் இன்று (வியாழக்கிழமை) நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யமுடியும். தேர்தலுக்கு பின்னர் அமையும் புதிய அரசு, முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்யும்.

இன்று (வியாழக்கிழமை) காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். இது அவர் தாக்கல் செய்யும் 6-வது பட்ஜெட் ஆகும். இதற்கு முன்பு மொரார்ஜி தேசாய் மட்டுமே 6 முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். இதன் மூலம் மொரார்ஜி தேசாயின் சாதனையை நிர்மலா சீதாராமன் சமன் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்தலுக்கு முன்பு தாக்கல் செய்யப்படும் இந்த இடைக்கால பட்ஜெட்டில் சலுகைகள் எதுவும் இருக்குமா என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் உள்ளது. ஆனால் இது மத்திய அரசின் வரவு மற்றும் செலவு திட்டங்களுக்கான அறிக்கையாகவே இருக்கும். புதிய அறிவிப்புகள் எதுவும் இருக்காது என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.


Next Story