சந்திரயான்-3 விண்கலம் ஏவப்படுவதன் மூலம் நிலவில் தரையிறங்கிய 4-வது நாடாகும் இந்தியாமத்திய மந்திரி ஜிதேந்திர சிங் பெருமிதம்


சந்திரயான்-3 விண்கலம் ஏவப்படுவதன் மூலம் நிலவில் தரையிறங்கிய 4-வது நாடாகும் இந்தியாமத்திய மந்திரி ஜிதேந்திர சிங் பெருமிதம்
x
தினத்தந்தி 9 July 2023 9:45 PM GMT (Updated: 9 July 2023 9:45 PM GMT)

புதுடெல்லி,

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வருகிற 14-ந் தேதி (வெள்ளிக்கிழமை) சந்திரயான்-3 விண்கலம் விண்ணில் ஏவப்படுவதன் மூலம், நிலவின் மேற்பரப்பில் விண்கலத்தை தரையிறக்கும் 4-வது நாடு என்ற பெருமையை இந்தியா பெறும் என்று மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் கூறினார்.

டெல்லியில் மத்திய விண்வெளித்துறை ராஜாங்க மந்திரி டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியதாவது:-

பிரதமர் நரேந்திர மோடியின் சமீபத்திய அமெரிக்கப் பயணம், விண்வெளித்துறையில் இரு நாடுகளுக்கும் இடையில் குறிப்பிடத்தக்க அளவில் ஒத்துழைப்பை அதிகரித்துள்ளது. இந்தியா தமது விண்வெளிப் பயணத்தை தொடங்குவதற்கு நீண்டகாலத்துக்கு முன்பே விண்வெளிப் பயணத்தைத் தொடங்கிய நாடுகள் தற்போது இந்தியாவைப் பார்த்து ஆச்சரியம் அடைவதுடன், இணைந்து செயல்படவும் விரும்புகின்றன.

பிரதமர் மோடியின் ஆட்சியில் நமது விண்வெளி நிபுணத்துவம் பெரிய அளவில் உயர்ந்துள்ளது. சந்திரயான்-3 என்பது சந்திரயான்-2 விண்கலத்தின் தொடர்ச்சியாகும். நிலவின் மேற்பரப்பில் மென்மையான தரையிறக்கத்தில் இந்தியாவின் திறனை நிரூபிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. நிலவின் சுற்றுவட்டப் பாதையில் விண்கலம் நுழைவதற்குத் தேவையான சிக்கலான அம்சங்கள் இதில் துல்லியமாக செயல்படுத்தப்பட்டுள்ளன.

நிலவின் மேற்பரப்பில் சந்திரயான்-3 வெற்றிகரமாக தரையிறங்கிய பிறகு, 6 சக்கரங்களைக் கொண்ட ரோவர் வெளியே வந்து சந்திரனில் பணி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரோவரில் உள்ள பல கேமராக்களின் உதவியுடன் படங்களைப் பெற முடியும்.

இந்தியாவின் விண்வெளித்துறை வரும் ஆண்டுகளில் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ரூ.82 லட்சம் கோடி) பொருளாதாரமாக வளர்ச்சி அடையும். நிலவின் மேற்பரப்பில் பாதுகாப்பான மற்றும் மென்மையான தரையிறக்கத்தை நிரூபிப்பது, சந்திரனில் ரோவர் சுழல்வதை உறுதி செய்வது, அறிவியல் சோதனைகளை நடத்துவது ஆகியவை சந்திரயான்-3 விண்கலத் திட்டத்தின் முதன்மையான 3 நோக்கங்களாகும்.

சந்திரயான்-1 விண்கலம் நிலவின் மேற்பரப்பில் நீர் இருப்பதைக் கண்டறிந்த பெருமைக்குரியது. அமெரிக்காவின் 'நாசா' போன்ற முன்னணி விண்வெளி நிறுவனங்கள்கூட இந்தக் கண்டுபிடிப்பால் வியந்துபோயின.

சந்திரயான்-3 விண்கலம், இஸ்ரோ உருவாக்கிய மார்க்-3 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்படும். சந்திரயான்-2 எதிர்பார்த்த அளவு வெற்றி அடையாததால், சந்திரயான்-3 லேண்டரின் வலிமையை அதிகரிக்க சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வருகிற 14-ந் தேதி (வெள்ளிக்கிழமை) விண்ணில் செலுத்தப்பட உள்ள சந்திரயான்-3 விண்கலத்தின் மூலமாக, நிலவின் மேற்பரப்பில் விண்கலத்தை தரையிறக்கும் 4-வது நாடு என்ற பெருமையை இந்தியா பெறும்.

இவ்வாறு அவர் கூறி னார்.


Next Story