பெண் அடித்து கொலை; 4-வது கணவர் கைது


பெண் அடித்து கொலை; 4-வது கணவர் கைது
x

குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் பெண்ணை அடித்து கொன்ற அவரது 4-வது கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ராமநகர்:

2-வது மனைவி

ராமநகர் தாலுகா அம்மன்புரா கிராமத்தை சேர்ந்தவர் போரய்யா (வயது 53). இவர் பசம்மா என்பவரை திருமணம் செய்து இருந்தார். குடும்ப பிரச்சினையில் ஏற்பட்ட தகராறில் கடந்த 2014-ம் ஆண்டு பசம்மாவை, போரய்யா கொலை செய்து இருந்தார். பின்னர் அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் 6 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த போரய்யா கடந்த 2020-ம் ஆண்டு சிறையில் இருந்து வெளியே வந்தார்.

பின்னர் அவர் பத்ரம்மா (40) என்ற பெண்ணை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். பத்ரம்மாவுக்கு ஏற்கனவே 3 திருமணம் நடந்து இருந்தது. அவர் 3 கணவர்களையும் பிரிந்து போரய்யாவை 4-வதாக திருமணம் செய்து இருந்தார். திருமணத்திற்கு பின்னர் இருவரும் கூலி வேலை செய்து வந்தனர். போரய்யாவுக்கும், பத்ரம்மாவுக்கும் மது அருந்தும் பழக்கம் இருந்து உள்ளது. இதனால் அவர்கள் 2 பேரும் தினமும் ஒன்றாக அமர்ந்து மதுகுடித்து உள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் குடிபோதையில் 2 பேருக்கும் இடையே தகராறு உண்டானது.

தொழிலாளி கைது

அப்போது பத்ரம்மாவை, போரய்யா கட்டையால் அடித்தார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த பத்ரம்மா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ராமநகர் புறநகர் போலீசார் பத்ரம்மா உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் பத்ரம்மாவை, போரய்யா கொன்றது தெரியவந்தது. இதனால் அவர் கைது செய்யப்பட்டார். போரய்யாவை கைது செய்து விசாரித்து வருகின்றனர். மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் 2-வது மனைவியை தொழிலாளி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story