மனைவியை கத்தியால் குத்தி கொன்ற தொழிலாளி


மனைவியை கத்தியால் குத்தி கொன்ற தொழிலாளி
x

ஹாசன் அருகே மனைவியை கத்தியால் குத்தி கொன்ற தொழிலாளியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

ஹாசன்:

ஹாசன் மாவட்டம் பேளூர் தாலுகா சீகனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரய்யா. இவரது மனைவி இந்திரம்மா(வயது 48). இவர்கள் இருவரும் காபித்தோட்டத்தில் கூலி வேலை செய்து வந்தனர். இதற்கிடையே மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான சந்திரய்யா, குடித்துவிட்டு வந்து தனது மனைவி இந்திரம்மாவிடம் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். அதுபோல் நேற்று முன்தினம் இரவும் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். பின்னர் இருவரும் படுத்து தூங்கி விட்டனர். நேற்று காலையில் இந்திரம்மா வழக்கம்போல் காபி தோட்டத்திற்கு வேலைக்கு சென்றுவிட்டார்.

அப்போது அங்கு வந்த சந்திரய்யா, மனைவி இந்திரம்மாவிடம் தகராறில் ஈடுபட்டு அவரை கத்தியால் சரமாரியாக குத்தினார். இதை தடுக்க வந்த மற்றொரு பெண்ணையும் அவர் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதில் பலத்த கத்திக்குத்து காயம் அடைந்த இந்திரம்மா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி அரேஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.


Next Story