மேற்குவங்காளம்: நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜி பின்னடைவு


மேற்குவங்காளம்: நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜி பின்னடைவு
x
தினத்தந்தி 2 May 2021 10:18 AM GMT (Updated: 2 May 2021 10:18 AM GMT)

நந்திகிராம் தொகுதியில் பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரி முன்னிலையில் உள்ளார்.

கொல்கத்தா,

மேற்குவங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தின் முதல்மந்திரியாக மம்தா பானர்ஜி செயல்பட்டு வருகிறார். 294 தொகுதிகளுக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது.

அதில் 203 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது. பாஜக 81 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. அனைத்து ஜார்கண்ட் மாணவர் சங்கம் 1 தொகுதியிலும், காங்கிரஸ் 1 தொகுதியிலும், ராஷ்டிரிய மதசார்பற்ற மஜ்லிஸ் கட்சி 1 தொகுதியிலும், சுயேட்சை 1 தொகுதியிலும் முன்னிலையில் உள்ளது. 

நந்திகிராம் தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், முதல்மந்திரியுமான மம்தா பானர்ஜி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பாஜக சார்பில் சுவேந்து அதிகாரி போட்டியிடுகிறார்.

இந்நிலையில், நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜி பின்னடைவை சந்தித்துள்ளார். மம்தா பானர்ஜி 30 ஆயிரத்து 655 வாக்குகள் பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரி 34 ஆயிரத்து 430 வாக்குகள் பெற்றுள்ளார்.

சுவேந்து அதிகாரியை விட 3 ஆயிரத்து 775 வாக்குகள் பின் தங்கிய நிலையில் மம்தா பானர்ஜி உள்ளார். மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் மீனாட்சி முகர்ஜி 1,880 வாக்குகள் பெற்றுள்ளார். இந்த தகவல் 3.30 மணி நேர நிலவரம் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Next Story